ஜெயலலிதாதானே நிரந்தர பொதுச்செயலாளர்? ஏன் நீக்கினீர்கள்? எடப்பாடியிடம் நீதிபதி கேட்ட பரபரப்பு கேள்வி!
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றுதானே விதி, பின்னர் அந்த பதவியை ஏன் கலைத்தீர்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி இன்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இதில் ஓபிஎஸ் வைத்த வாதத்தில்.. இந்த பொதுக்குழு கூடியதே சட்ட விரோதமானது. விதியை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் விதியை பின்பற்றாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
எடப்பாடி
இதையடுத்து எடப்பாடி தரப்பு வைத்த வாதத்தில்.. அதிமுகவில் பொதுக்குழுவிற்கு உட்சபட்ச அதிகாரம் உள்ளது. கட்சி விதி அதைத்தான் சொல்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பொதுக்குழுவை கூட்ட முடியும். பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட முடியும். எனவே பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டுள்ளது. தலைமை கழக செயலாளர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்ததில் தவறு இல்லை, என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.
நீதிபதி கேள்வி
நீதிபதி: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றுதானே விதி. பின்னர் அந்த பதவியை ஏன் கலைத்தீர்கள். பின்னர் அந்த பதவியை மீண்டும் உருவாக்கியது எப்படி. அதில் எப்படி எடப்பாடியை தேர்வு செய்தீர்கள். இதற்கு விளக்கம் அளியுங்கள் பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்பதாக கூறியே நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினீர்கள். பின்னர் அதை நீக்கி, மீண்டும் அதை உருவாக்க என்ன காரணம். விதிப்படிதான் பொதுக்குழு கூடியதா?
எடப்பாடி வாதம்
எடப்பாடி வாதம்: ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் பொதுக்குழுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கோரினர். இதனால் அவைத்தலைவர் பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டார்.
ஓபிஎஸ் வாதம்
ஓபிஎஸ் வாதம்: பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. அதோடு அவைத் தலைவரை நிரந்தரமாக தேர்வு செய்ததை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். அதனால் இவர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது என்று வாதம் வைக்கப்பட்டது. இரண்டு தரப்பும் மாறி மாறி வாதம் வைப்பதால் வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.