இந்தியாவுக்கு மதம் தேவை- திமுக உள்ளிட்ட 11 அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் மீது பாய்வதன் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட 11 அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காட்டமாக கூட்டறிக்கை கொடுத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சாசனப் பதவியில் இருந்த போதும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் சர்ச்சைக்குரிய பல கருத்துகளைக் கூறி வருகிறார். சனாதனம், இந்து தர்மம் குறித்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசாமல் இருப்பது இல்லை. இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பையும் தொடர்ந்து உருவாக்கி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக ஆளுநர் ரவி இடைவிடாமல் இத்தகைய விமர்சனத்துக்குரிய கருத்துகளை பேசியும் வருகிறார். வாரணாசியில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ரவி, நமது நாட்டின் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நமது நாட்டு மக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலை முரண்பாடானது, துரதிஷ்டவசமானது என்றார். மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் கொண்டாடும் இந்த வரலாற்று விழாவில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார்.

நாடுன்னா மதம் தேவை
அதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்த நாடாக இருந்தாலும் ஒரு மதம் சார்ந்துதான் இருக்க வேண்டும். இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல என பேசியிருக்கிறார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை குண்டு வெடிப்பு சம்பவம் என்றும் பயங்கரவாதத் தாக்குதல் என்றும் வலியுறுத்தி கூறியிருந்தார் ஆளுநர் ரவி.

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம்
அத்துடன், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ -விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என பகீர் குற்றச்சாட்டுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்திருந்தார். பயங்கரவாதத்தில் அரசியல் வேண்டாம் என்றும், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் என்றும், யாருக்கும் நட்பு இல்லை என்றும், அவர்களிடம் தயவு காட்டக் கூடாது என்பதும் ஆளுநர் ரவியின் பேச்சு.

வலுக்கும் டிஸ்மிஸ் கோரிக்கை
இத்தகைய தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பேச்சுகளை அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது கண்டித்து வந்தனர். அரசியல் சாசனப் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பு இல்லாமல் ஆளுநர் பேசுவதால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனாலும் ஆளுநர் ரவியின் பேச்சு நின்றபாடில்லை.

திமுக கூட்டணி கட்சிகள்
இதனையடுத்து திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, மமக, கொமதேக, தவாக ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டாக இன்று ஆளுநரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் பேசி வரும் விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆகையால் ஆளுநர் பதவியை விட்டு விலகி தமது கருத்துகளை ரவி சொல்லலாம் எனவும் அந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications