இதான் காம்ரேட்! ரூ.10 லட்சத்தை அரசுக்கே கொடுத்தது ஏன்? தழுதழுத்த குரலில்.. உடைந்து பேசிய நல்லகண்ணு
சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தனக்கு கொடுக்கப்பட்ட பரிசு தொகையை முதல்வர் ஸ்டாலினிடம் திரும்பி வழங்கினார். நல்லகண்ணு இதற்கு அளித்த விளக்கம் இணையம் முழுக்க பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
Recommended Video
நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்.
சுதந்திரத்தினத்தின் போது எப்போதும் பல்வேறு சாதனைகளை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படியே இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கினார்.
கொடி ஏற்றிய பின் நடந்த விழாவில் வரிசையாக விருதுகள் வழங்கப்பட்டன.
விருது தொகை ரூ10 லட்சத்துடன் ரூ5,000 சேர்த்து தமிழக அரசிடமே வழங்கினார் தகைசால் தமிழர் நல்லகண்ணு!
நல்லகண்ணு விருது
தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசியலில், பல துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தில் கொடுக்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு இந்த வருடம் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இவரின் அரசியல் பயணத்தை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
எளிமை
இந்திய அரசியலிலேயே மிகவும் எளிமையான தலைவராக பார்க்கப்படுபவர் நல்லகண்ணு. இன்று விருது வாங்கிய நல்லகண்ணு தமக்கு விருதுடன் வழங்கப்பட்ட ரூ10 லட்சத்துடன் ரூ5,000 சேர்த்து தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கே திரும்பி வழங்கினார். இவரின் செயல் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேடையில் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அடுத்த நொடியே கொஞ்சமும் தாமதிக்காமல் பணத்தை முதல்வர் ஸ்டாலினிடம் திருப்பி வழங்கினார்.
நிவாரணம்
இதை பற்றி தளுதளுத்த குரலில் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் விளக்கினார், முதல்வரின் நிவாரண நிதிக்கு இதை கொடுத்து உள்ளேன். நிவாரண நிதிக்கு இது பயன்படட்டும் என்றுதான் கொடுத்து இருக்கிறேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய மரியாதையாக இருக்கிறது. என்னை அங்கீகரித்த அரசுக்கு பெரிய நன்றி. விருதுக்கு என்னை தேர்வு செய்தவர்களுக்கு நன்றி.
மக்கள் பணம்
எனக்கு அந்த பணம் வேண்டாம். அந்த காசு மக்களுக்கு பயன்படட்டும். மக்களுக்கு பணம் செல்வதே சரியானதாக இருக்கும். முதல்வரின் நிவாரண நிதிக்கே அந்த பணம் செல்லட்டும் என்று நல்லகண்ணு கூறியுள்ளார். நல்லகண்ணுவின் இந்த விளக்கம் இணையம் முழுக்க பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலர் இவரின் செயலை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.