எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
பாஜகவால் தான் ஓபிஎஸ் அணி வேட்பாளரை அறிவிக்க தாமதம் ஆகிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முடிவெடுக்க தாமதம் செய்வதால் தான் நாங்கள் வேட்பாளரை அறிவிக்க தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இப்போதே, நாங்கள் போட்டியிடவில்லை என்று சொன்னால், இன்று இரவே கூட வேட்பாளரை அறிவிப்போம் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நீங்க சொல்லுங்க.. அட நீங்க சொல்லுங்க.. என இருவர் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே இருக்கும் சினிமா காமெடி போல ஆகிவிட்டது ஓபிஎஸ், ஈபிஎஸ் நிலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருவருமே வேட்பாளரை முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டாலும், வேட்பாளரை அறிவிக்காமல், அவர்கள் முதலில் அறிவிக்கட்டும் என்று காத்திருந்து வருகின்றனர்.
“டெட்லைன்”.. இன்று இரவு 12 மணி வரை.. பாஜக, எடப்பாடிக்கு கெடு விதித்த ஓபிஎஸ் டீம்! அதிரவிட்ட மாஜி!
இடைத்தேர்தல் பரபர
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்காக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, நாதக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரதான எதிரணியான அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்புமே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதி்முக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வேட்பாளரை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பாளர் - முடிவு
அதேபோல, ஓ.பன்னீர்செல்வமும் பல கட்டங்களாக தனது அணியின் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி ஒரு பிரபலமான வேட்பாளரை தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இருவருமே வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, இடைத்தேர்தலில் நிற்பதா இல்லையா, போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
2 ஆப்ஷன்
இந்நிலையில், தங்கள் அணி சார்பில் வேட்பாளரை இன்னும் அறிவிக்காததற்கு பாஜக தான் காரணம் எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி. டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய புகழேந்தி, "2 ஆப்ஷன் கொடுத்தோம். முதல் ஆப்ஷன் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சொன்னோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெளிவாகச் சொன்னார். அதன்படி வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்துவிட்டோம். இரண்டாவது ஆப்ஷன், பாஜக போட்டியிட்டால் நாங்கள் நிற்க மாட்டோம் எனத் தெரிவித்திருந்தோம்.
பாஜகவால் தான்
இதுவரை பாஜக தங்கள் நிலைப்பாட்டை சொல்லவே இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை, நாளை ஆலோசனை என்கிறார்கள். என்ன நடக்கிறது, எப்போது முடிவைச் சொல்லப்போகிறார்கள் என ஒன்றும் புரியவில்லை. பாஜக முடிவெடுக்க தாமதம் செய்வதால் தான் நாங்கள் வேட்பாளரை அறிவிக்க தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
பாஜக சொன்னால் உடனே
நாங்கள் வேட்பாளரை முடிவு செய்துவிட்டோம். அறிவிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், இரண்டாவது ஆப்ஷனை கொடுத்த இடத்தில் தான் எங்களுக்கு தாமதமாகிறது. பாஜக வேட்பாளரை நிறுத்தினால், நாங்கள் போட்டியிட மாட்டோம். எதிரணியில் தேசியக்கட்சியான காங்கிரஸ் நிற்பதால், தேச நலன் கருதி பாஜகவுக்கு விட்டுக்கொடுப்போம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்னதால் தான் இன்னும் காத்திருக்கிறோம். அவர்கள் இப்போதே, நாங்கள் போட்டியிடவில்லை என்று சொன்னால், இன்று இரவே கூட வேட்பாளரை அறிவிப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.