பதவிக்கு 2 பேர் கடும் போட்டி.. எதுக்கு பிரச்சனை.. மூணாவது ஆப்ஷனை கையில் எடுக்கும் யோசனையில் ஈபிஎஸ்!
சென்னை : ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து தனது ஆதரவாளர்களை அந்த இடங்களில் நியமித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்டங்களில் இருந்து அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், மா.செ பதவியை பிடிக்க இருவர் தீவிரமாக முயன்று வருகின்றனராம்.
இந்த நேரத்தில் யாருக்கு பதவியைக் கொடுத்தாலும், அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் குமரி மேற்கு மாவட்ட செயலாளரிடமே கூடுதலாக இந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கும் யோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ்
அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வந்த கடுமையான மோதல்களுக்கு மத்தியில் பொதுக்குழுவில் வைத்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்து வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டன.

ஓபிஎஸ் பதவிகள் பறிப்பு
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு நெருக்கமான பலருக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். ஓபிஎஸ் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கும் வேட்டு வைத்து, அந்த பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார் ஈபிஎஸ்.

புதிய நிர்வாகிகள்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள 45 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வகித்து வந்த பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலைக் கூட வெளியிட்டு விட்ட எடப்பாடி பழனிசாமியால், மாவட்ட செயலாளர்களை இன்னும் மாற்ற முடியவில்லை.

இந்த பதவிக்கு யார் யார்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்ததால் நீக்கப்பட்ட 6 மாவட்ட செயலாளர் பதவிகளையும் தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க பலரும் முட்டி மோதி வருவதால், யாருக்கு பதவி கொடுத்தாலும், மற்றவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால் இன்னும் யோசனை செய்து வருகிறாராம்.

கன்னியாகுமரி கிழக்கு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் அசோகன், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பதால் அவர் கட்சியை விட்டு ஈபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளார். காலியான குமரி கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் பதவியைப் பெற முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மா.செ சிவசெல்வராஜன் உட்பட பலர் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனராம்.

இப்படி செய்துவிடலாமா
இவர்களில் யாருக்கு மா.செ பதவி கொடுத்தாலும், மற்றவர்களின் அதிருப்தியை சந்திக்க வேண்டி வரும் என்பதால் என்ன செய்வது எனத் திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பேசாமல், குமரி மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ஜான் தங்கத்திடமே கிழக்கு மாவட்ட பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, சூழல் தனக்கு முழுமையாக சாதகமாக அமையும்போது புதிய மாவட்ட செயலாளரை அறிவிக்கலாமா என்ற யோசனையில் ஈபிஎஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

6 மாவட்டங்களிலும்
குமரி கிழக்கு மாவட்டம் மட்டுமல்லாது, வைத்திலிங்கம் மா.செவாக பதவி வகிக்கும் தஞ்சை தெற்கு, எம்.ஜி.சுப்பிரமணியன் மா.செவாக பதவி வகிக்கும் தஞ்சை வடக்கு, சையதுகான் பதவி வகிக்கும் தேனி, வெல்லமண்டி நடராஜன் மா.செவாக இருக்கும் திருச்சி மாநகர் மாவட்டம், குன்னல் ராமச்சந்திரன் பொறுப்பு வகிக்கும் பெரம்பலூர் என எல்லா மாவட்டத்திலும் இந்த நிலை தானாம். இந்த 6 மாவட்டங்களிலும் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications