மாஜி முடிவால் அப்செட் ஆன எடப்பாடி.. “கைக்கு வரும் நேரத்தில்”- கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஈபிஎஸ்
சென்னை : அதிமுக தனது கட்டுப்பாட்டில் வரும் நேரத்தில், முக்கிய நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரைகளைக் கேட்பதில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி வருத்தத்தில் இருக்கிறாராம்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தேசிய தலைவர் நட்டாவை காரைக்குடியில் சந்தித்துப் பேசியது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கே தகவல் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
விஜயபாஸ்கர் நட்டாவை சந்தித்த பிறகு தான், இந்த நியூஸ் எடப்பாடி பழனிசாமி காதுக்குச் சென்றுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆகிவிட்டாராம்.

மாஜி அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ந்து ரெய்டுகளால் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், தங்கமணி, காமராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் சோதனைகள், விசாரணைகளின் பிடியில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர்கள் ஒவ்வொருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பாஜக தயவை நாடும் மாஜிகள்
இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவைத் தொடர்ந்து, சமீபத்திலும் சில அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதற்குப் பின்னணியில் ஓபிஎஸ் தரப்பினரின் கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பலர் மத்திய பாஜக அரசின் தயவை நாடி வருகின்றனர். மாஜி அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் டெல்லிக்கே சென்று முக்கியமான மூவ்களில் ஈடுபட்டனர்.

டெல்லி ஹெல்ப்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தன் மீதான 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து ஃப்ரீ ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் கோரிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்காமல் மய்யமாக தலையசைத்து வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியோடு டெல்லி சென்றிருந்த நிலையில் சில நம்பிக்கைகளையும் மேலிடம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெய்டு - நெருக்கும் குட்கா வழக்கு
இதற்கிடையே தனியார் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் அண்மையில் நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் பணம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டன. வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டன. மேலும், விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கிலும், சிபிஐ எந்நேரத்திலும் விசாரணையை நெருக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

நட்டாவை சந்தித்த விஜயபாஸ்கர்
இந்தச் சூழலில் தான் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை ரகசியமாகச் சந்தித்துப் பேசினார். 2 நாள் பயணமாக சமீபத்தில் தமிழகம் வந்திருந்த நட்டா, 23ஆம் தேதி காரைக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ சோழன் சித.பழனிசாமி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அங்கு வைத்து ஜேபி நட்டாவை விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் சந்தித்தார்.

ரகசிய திட்டம்
உள்ளூர் நிர்வாகிகளுக்குக் கூட தெரியாமல் இந்த சந்திப்பு ரகசியமாக திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னர் அதிமுகவில் இருந்த சோழன் சித.பழனிசாமி உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே இந்த சந்திப்பு பற்றி முன்கூட்டியே தெரியும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக சீனியர்கள் பலருக்கும் கூட இதுபற்றி விஜயபாஸ்கர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

1 மணி நேரம்
விஜயபாஸ்கர் - நட்டா சுமார் 1 மணி நேரம் வரை தனியாக ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு தூசி தட்டி எடுத்துள்ள நிலையில், நட்டாவை அவர் சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், நட்டாவை அவர் தனியாகச் சந்தித்துள்ளார்.

கிளம்பிய சந்தேகம்
பாஜக தேசிய தலைவர் நட்டாவை விஜயபாஸ்கர் ரகசியமாக சந்தித்திருப்பதால் பாஜகவில் அவர் இணையப் போவதாகவும் ஒரு தகவல் பரபரத்தது. இந்நிலையில், இந்த சந்திப்பு தான் எடப்பாடி பழனிசாமிக்கு டென்ஷனை ஏற்றியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சந்திப்பு குறித்து தன்னிடம் தெரிவிக்காததும், தன்னிச்சையாக செயல்பட்டதும் ஈபிஎஸ்ஸை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆளுக்கு ஆள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தன் பேச்சை மீறி நடந்துகொள்வதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடுப்பில் இருக்கிறார். பிரஸ் மீட்களில் தேவையில்லாமல் பாஜகவை சீண்டும் படியும், போலீசாரை சீண்டும் வகையிலும் பேசி வந்த 2 சீனியர்கள் மீது அப்செட்டில் இருந்தார் ஈபிஎஸ். இந்நிலையில், விஜயபாஸ்கர், திடீரென பாஜக தலைமையிடம் ரகசிய சந்திப்பை நடத்தியதை அறிந்து டென்ஷன் ஆகிவிட்டாராம். இதையடுத்து, விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications