அவ்வளவு உறுதியா இருந்தாரே ஜிகே வாசன்.. ஒரே நாளில் ஜகா வாங்கியது ஏன்! லாக் செய்த எடப்பாடி?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் த.மா.கா போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் மிக உறுதியாக இருந்தார். ஆனால், ஒரே இரவில் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்.27ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அங்கு ஏற்கனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
விடக்கூடாது.. மோதி பார்க்க தயாராகும் ஓபிஎஸ்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எகிறும் எதிர்ப்பார்ப்பு
ஈரோடு கிழக்கு
இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்த உடனே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜ் களமிறங்கினார். இதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வென்றார்.
என்ன நடந்தது
இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியே களமிறங்குகிறது. அதேபோல அதிமுக தரப்பிலும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் த.மா.கா போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் மிக உறுதியாக இருந்தார். ஆனால், ஒரே இரவில் தனது முடிவை மாற்றிக்கொண்டு அதிமுக போட்டியிடச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த ஒரே இரவில் நடந்தது என்ன?
உறுதியாக இருந்த வாசன்
இது குறித்து அதிமுக மற்றும் த.மா.கா. தரப்பின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, எடப்பாடியைச் சந்தித்த வாசன், த.மா.கா.வுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொன்னார் வாசன். அதற்கு அதிமுக தரப்பில், த.மா.கா.வுக்கு விட்டுக்கொடுப்பதில் எங்களுக்கு விருப்பம்தான். ஆனால், இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.
திமுக கூட்டணி
அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போதே காங்கிரசுடன் முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறார் ஸ்டாலின். காங்கிரசின் சிட்டிங் தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்தால் தேவையின்றி கூட்டணிக்குள் அதிருப்தி உருவாகும். அப்படி ஒரு அதிருப்தி இப்போதே உருவாகிட வேண்டாம் என நினைத்துத்தான் மீண்டும் அவர்களுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக எங்களுக்கு தகவல்.
அதிமுக பிளான்
காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுகவின் ஆதரவு இல்லாமல் ஜெயிக்க முடியாது. ஆனால் காங்கிரசை வெற்றிபெற வைக்குமா திமுக? என்பது சந்தேகம் தான். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதனால், காங்கிரசை எதிர்த்து த.மா.கா. நின்றால் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை. ஈசியாக ஜெயித்துவிடும் என்பது எங்களின் கணக்கு. அதுவே அதிமுக போட்டியிட்டால் காங்கிரஸ் ரொம்பவும் தடுமாற வேண்டியதிருக்கும். காங்கிரசை அதிமுகவால் ஈசியாக ஜெயிக்க முடியும்.
தேர்தல் செலவு
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணியை ஜெயித்தால் அது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு விசயம். இன்னொரு விசயம் என்னன்னா... தேர்தல் செலவு. எப்படிப் பார்த்தாலும் 10, 15 கோடி ரூபாய் செலவாகும். அவ்வளவு செலவு செய்ய உங்களிடம் வலிமையான கேண்டிடேட் இருக்கிறார்களா? சொல்லுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். அதிமுக எந்த சூழலிலும் செலவுகளை ஏற்காது. அதேசமயம், த.மா.கா.வுக்காக தேர்தல் வேலை பார்க்கும் அதிமுகவின் செலவுகளையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்.
பணம் இல்லை
இதற்கெல்லாம் ஓ.கே.எனில் த.மா.கா.வுக்கு மீண்டும் விட்டுக் கொடுக்கிறோம் என்று எதார்த்த சூழலை விவரித்திருக்கிறார் எடப்பாடி. இதனையடுத்து, அங்கிருந்தபடியே, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த த.மா.கா. பிரமுகர்களான யுவராஜா, விடியல் சேகர் உள்ளிட்ட பலரிடமும் போட்டியிடுவது குறித்து வாசன் விசாரிக்க, தேர்தல் செலவுகளைக் கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டால் போட்டியிடுகிறோம் ; எங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இல்லை என வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள்.
ஜகா வாங்கிய வாசன்
இவர்களைத் தவிர, கோடிக்கணக்கில் செலவு செய்யும் வேட்பாளர் யாரும் த.மா.கா.வில் இல்லை என்பதை உணர்ந்து, எடப்பாடி சொல்வதுதான் சரி என்பதை ஏற்றுக்கொண்டு , போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார் வாசன். அதன்பிறகு, எங்கள் அலுவலகத்துக்கு வந்து அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வாருங்கள். நீங்கள் கோரிக்கை வைப்பதை நாங்கள் ஏற்கிறோம் என வாசன் தெரிவித்திருக்கிறார். அதன்படியே எல்லாம் நடந்தது. இதுதான் வாசன் ஜகா வாங்கிய பின்னணி என்று விவரித்தனர்.