காரணமே வேறயாம்! திடீரென இரவோடு இரவாக டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி! நடக்க போவது என்ன?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று இரவு டெல்லி செல்கிறார். அவர் டெல்லி பயணத்திற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் . என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
“ஆளுநர் ரவி அரசமைப்பு சட்டத்துக்கே விரோதி.. தமிழகத்தை சீர்குலைக்க முயற்சி” - வரிந்துகட்டி வந்த காங்!
ஆளுநர் ரவி
மொத்தம் 22 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநர் ரவி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது தேசிய அளவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வரும் 16ம்தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது. பாஜக அல்லாத மாநில கட்சிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாகவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பல்வேறு கட்சிகள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முதல்வர் ஸ்டாலினும் மூத்த திமுக உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்பது தொடர்பாக இவர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
டெல்லி பயணம்
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில்தான் ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இதனால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஏதேனும் ஆலோசிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சில அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மை என்ன?
ஆனால் ஆளுநர் உண்மையில் அதற்காக டெல்லி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் இந்த டெல்லி பயணம் பர்சனல் பயணம் என்கிறார்கள். அதோடு அங்கிருந்து அவர் பீகார் செல்ல இருக்கிறார். பீகாரில் இருக்கும் பாட்னா கோவில் ஒன்றில் அவர் வழிபாடு நடத்த உள்ளார். மற்றபடி இவரின் பயணத்திற்கு பின் வேறு அதிகாரபூர்வ காரணங்கள் இல்லை என்றே ஆளுநர் மாளிகை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.