பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசுக்கு என்னதான் தயக்கம்? - கனிமொழி எம்.பி. கேள்வி
சென்னை: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று திமுக நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
திமுக லோக்சபா உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்றத்தில் மகளிருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அரசியலிலும் பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில, சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் அமைப்பு தொடக்க விழாவில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றி கனிமொழி, பெண்கள் அரசியல் பேச வேண்டும். அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது. அனைத்து துறையிலும் பெண்கள் வரவேண்டும். 50 சதவீத அளவிற்கு பெண்கள் அரசியலில் வரவேண்டும்.
பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. பெண்கள் தங்களை தெரிந்து கொள்வதற்கும் தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதற்கும் கல்லூரி ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியலில் 50% பெண்களை கூடிய விரைவில் அடைவோம் என கனிமொழி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதில் பாஜக தயக்கம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு, பாஜக அல்லாத பிற அரசியல் கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில், பல்வேறு நெருக்கடிகளை அளிக்கக் கூடிய வகையில் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இலவசங்களை வழங்குவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக் கூடிய மக்கள் சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் மேம்பாடு அடைவதற்காகவே இலவசங்கள் வழங்கப்படுகிறது. இதனை அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கனிமொழி தெரிவித்தார்.
எல்லோர் குரலையும் மதிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - கனிமொழி எம்.பி பேச்சு