ஓபிஎஸ் - ஜெ.தீபா திடீர் சந்திப்பு.. “எல்லாம் அவர் கையில்”.. பரபரத்த கிரீன்வேஸ் சாலை.. என்ன நடந்தது?
ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன் என்பது பற்றி விளக்கியுள்ளார் ஜெ.தீபா.
சென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று திடீரென ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தான் ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன் என்பது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் ஜெ.தீபா.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினார்.
ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்ற ஜெ.தீபா.. "புது ரூட்டா இருக்கே".. டக்கென திரும்பிப் பார்த்த ஈபிஎஸ்!
ஓபிஎஸ்ஸை சந்தித்த ஜெ.தீபா
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற யூகங்கள் எழுந்தன. இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
அழைப்பு விடுத்த தீபா
ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.தீபா, "எனது குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்க வந்தேன். அரசியல் தாண்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் நல்ல பரிச்சயம் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து அழைக்க வந்தேன்" எனத் தெரிவித்தார். ஜெ.தீபா - மாதவன் தம்பதியருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு பெயர் வைக்கும் நிகழ்வுக்காக ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் தீபா.
அதிமுக பிரச்சனை
ஜெ.தீபாவிடம், அதிமுக தலைமைக்கு யார் சரியானவர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு வெளி மனிதராகத்தான் நான் பேச முடியும். நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் அதிமுக பிரச்சனை தொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
சசிகலா - உண்மை
சசிகலா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வைத்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜெ.தீபா, அந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. நான் சொன்னதெல்லாம் உண்மைகள் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய ஜெ.தீபா, போயஸ் தோட்ட வீட்டை தற்போதுதான் வீடாக மாற்றியுள்ளேன். அதில் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் கடவுள் கையில்
மீண்டும் வேதா நிலையம் அதிகார மையமாக மாற வாய்ப்புள்ளதா, எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெ.தீபா, "எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கிறது. எந்த முடிவும் நாம் எடுப்பதில்லை." எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்போது அரசியல் ரீதியாக நான் எதையும் பேச இப்போது விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.