ஆமா.. திடீருன்னு ரஜினிகாந்த்தை பார்க்க போயிருக்காரே கமல்ஹாசன்.. என்ன காரணம்.. சினேகன் விளக்கம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவருடன் சுமார் அரைமணிநேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில், ரஜினிகாந்த் வீட்டுக்கு கமல் சென்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இருவருமே திரையுலகில் நீண்ட கால நண்பர்கள் என்பதால் ரஜினிகாந்த், கமல்ஹாசனிடம் அரசியல் ஆதரவு கேட்டிருப்பாரா என்று கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
ரஜினி நிலைப்பாடு
ஒருவேளை அப்படி அவர் கேட்டாலும் ரஜினிகாந்த ஆதரவு கொடுப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அரசியலில் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. சசிகலா உடல்நிலை பற்றி டிடிவி தினகரனுக்கு போன் போட்டு ரஜினி விசாரித்தவர். அவருக்கு யாரும் பகைவர்களாக இருக்க கூடாது என்ற எண்ணம் உண்டு.
ரஜினி சம்மதிக்க மாட்டார்
இந்தநிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவை அளித்ததன் மூலம் பிற கட்சிகளின் அல்லது பிற கட்சி தலைவர்களின் கோபத்தையும் அல்லது அதிருப்தியையும் சம்பாதித்துக் கொள்ள ரஜினி விரும்ப மாட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கமலுக்கு ஆதரவு அளிப்பதால் ரஜினிக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதற்கான அழுத்தமும் இல்லை.
நீண்ட கால வரலாறு
ஆனால் மற்றவர்கள் ஆதரவு கேட்பதற்கும் கமல் ஆதரவு கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இவ்வாறு ஆதரவு கேட்பதற்கான உரிமை கமல்ஹாசனுக்கு அதிக அளவில் இருக்கிறது. அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பு என்பது நீண்டகால வரலாறு கொண்டது. எனவே தான் இந்த சந்திப்பு அதிகமாக விவாதிக்கப்படுகிறது.
ஆதரவு கேட்கும் நேரம் இல்லை
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணி பிரிவு செயலாளர் மற்றும் பாடலாசிரியர் சினேகன், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இது ஆதரவு கேட்பதற்கான நேரம் கிடையாது. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக கமல்ஹாசன் நேரடியாக சென்றிருப்பார். நீண்ட கால நண்பர்கள் என்ற அடிப்படையில் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி கமல்ஹாசனுக்கு அக்கறை உள்ளது.
மாற்றம் தேவை
அதே நேரம் இந்த சந்திப்பின் போது கண்டிப்பாக அரசியலும் பேசுயிருப்பார்கள். ஏனெனில் இருவருமே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனி கட்சி துவங்கும் திட்டத்தோடு இருந்தவர்கள் . அதில் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். ஒருவர் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை.
கமல் ஆதரவு கேட்பார்
45 ஆண்டுகால நட்பை புதுப்பித்துக் கொள்வதற்கு அவ்வப்போது இருவரும் தொலைபேசி மூலமாக பேசிக்கொள்வது வழக்கம். இப்போது ரஜினிகாந்த் வீட்டுக்கு கமல் சென்றிருப்பது முழுக்க முழுக்க நட்பு அடிப்படையிலானது. பிரத்தியேகமாக அரசியலைப் பற்றி பேசுவதற்காக கமல்ஹாசன் செல்லவில்லை. கண்டிப்பாக காலம் வரும் போது அதற்கான பயணம் இருக்கும். அப்போது ஆதரவு கேட்கத்தான் போகிறார். இவ்வாறு சினேகன் விளக்கம் அளித்துள்ளார்.