எல்லாம் போச்சு.. இனி எப்படி?- ஸ்டாலின் முடிவால் ஷாக் ஆன ஓபிஎஸ் டீம்.. கொந்தளிப்புக்கு பின்னணி இதானா?
சென்னை : கோடநாடு கொலை வழக்கு இத்தனை ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மகிழ்ச்சி கொடுக்கவில்லை, மாறாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாக நடைபெற்று வந்தது. 300க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களிடமும் மறு விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. கோடநாடு வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்குவதாக கூறப்பட்ட நிலையில் தான் திடீரென வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக விவகாரத்தில் கோடநாடு வழக்கு தங்களுக்கு கைகொடுக்கும் என பெரிதும் நம்பியிருந்த ஓபிஎஸ் தரப்பு, தமிழக அரசின் இந்த முடிவால் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு..சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி..சிக்குமா பெருந்தலைகள்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு
கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் நடந்த காவலாளி கொலை சம்பவம், எஸ்டேட் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெ. உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். சமீபத்தில் கூட நீதிமன்றத்தில், முக்கியமான சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
எடப்பாடிக்கு சாதகம்?
இந்நிலையில்தான், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை மேலும் தாமதமாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி வந்ததாக கூறப்பட்ட நிலையில், விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், தனிப்படை போலீசாரின் விசாரணையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் சிக்கவில்லை என்பதாலேயே அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பன்னீர் தரப்பின் நம்பிக்கை
அதிமுக உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்த நிலையில், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என இரு தரப்பும் முட்டி மோதி வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு கோடநாடு வழக்கை பெரிதும் எதிர்பார்த்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் நம் கை ஓங்கும் என எதிர்பார்த்து வந்தது ஓபிஎஸ் டீம். அதன் காரணமாக சமீப சில வாரங்களாக, அதாவது ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தொடங்கியது முதலே கோடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
பெரிதும் நம்பிய ஓபிஎஸ்
ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், கோவை செல்வராஜ், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் மகன்களான ஓபி ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோரும் கோடநாடு வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தி வந்தனர். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்கினால், மொத்தமாக அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் எனக் கணக்குப் போட்டனர். இதையொட்டியே, சிறையில் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி கட்சி நடத்துவார் எனக் கேட்டு வந்தனர்.
பிடி கிடைக்கல
இந்நிலையில், கோடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பை உற்சாகம் இழக்கச் செய்துள்ளது. சிபிசிஐடி விசாரணை, தனிப்படை போலீசை விட உயர்மட்டமானது தான் என்றாலும், இதற்கு காலதாமதம் ஏற்படுமே எனக் கருதுகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கியமான பிடி எதுவும் கிடைக்காததால் தான் வழக்கு மாற்றப்படுவதாகவும் எழுந்துள்ள கருத்து மேலும் அவர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.
ஓபிஎஸ் அப்செட்
கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனையிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு நம்பிக்கையான மூவ் இருந்தாலும் அது நமக்கு பலம் கொடுக்கும், ஆனால் இப்போதைக்கு அது நடப்பது போல தெரியவில்லையே, திமுக அரசும் வேகம் காட்டுவதாகத் தெரியவில்லையே என தங்கள் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளனர்.
மகிழ்ச்சியாக இல்லை
கோடநாடு வழக்கைப் பொறுத்தவரை நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் இனியும் காலதாமதாம் செய்யக்கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
திமுக + ஈபிஎஸ் கூட்டு
கோடநாடு வழக்கு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் உண்மை நிலை தெரிய வருமா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் வந்தாலும் திமுக அரசு, கோடநாடு வழக்கு பற்றி முழுமையாக விசாரிக்காது. எடப்பாடி பழனிசாமியுடன் திமுக அரசு டீலிங் வைத்திருக்கிறது எனக் கடுமையாகச் சாடிப் பேசியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.
கொந்தளிப்பு
இத்தனை காலமாக, ஓபிஎஸ் தரப்புக்கு திமுக அரசு உதவுவதாக, எடப்பாடி தரப்பினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியே பேசி வந்தனர். ஸ்டாலின் மீதான ஈபிஎஸ் தரப்பின் விமர்சனங்களுக்கு எல்லாம் கூட ஓபிஎஸ் தரப்பினர் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் தான் தற்போது பிளேட்டையே மாற்றிப் போட்டுள்ளனர். திமுக அரசு எடப்பாடி பழனிசாமிக்கு உதவி வருவதாக ஓபிஎஸ் தரப்பினர் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.