சென்னை வெள்ளம்: 2015ல் களம் வந்த தனியார் அமைப்புகள் இப்போது எங்கே? தன்னார்வலர்கள் ஏன் உதவவில்லை?
சென்னை: 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு அதிக அளவில் உதவிகளை செய்தனர். தற்போது சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதுபோன்ற தனியார் பங்களிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இது ஏன் என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
2015ம் ஆண்டு ஒரே நாளில் சென்னையில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. மேலும் அவசரமாக ஏரிகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக, சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது.
ராணுவம் வந்து உணவு பொட்டலங்களை வீசி மக்களின் பசியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
வெள்ளம் ஆரம்பித்தது முதலே தனியார் தொண்டு நிறுவனங்களும் களத்திற்கு வந்தனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி கேட்டு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பல பகுதிகளிலுள்ள மக்களும் சென்னை மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவிகள் செய்தனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னார்வலர்களும் ஆயிரக்கணக்கில் களத்திற்கு சென்றனர். ஏனென்றால் அரசு நிர்வாகத்தால் மட்டும் தங்களிடமுள்ள குறிப்பிடத்தக்க ஊழியர்களை வைத்துக்கொண்டு சென்னை நகரம் முழுமைக்கும் உதவிகளை செய்து விட முடியாது. எனவே இளைஞர் படை மக்களை மீட்பதில் பெரிதும் உதவி செய்தது.

தனி நபர்கள் உதவிகள்
முதியோர்களை படகில் ஏற்றுவது, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பது, கொசுவத்தி கொடுப்பது, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவது , போர்வைகள் வழங்குவது என்று தன்னார்வலர்கள் மிகப்பெரும் பணியாற்றினர். தமிழக மக்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு உதவிகரமாக இருக்கிறார்கள் என்று அப்போது நாடு முழுக்க ஊடகங்களால் அந்த நிகழ்வுகள் புகழப்பட்டன. ஆனால் இந்த முறை தொடர்ந்து ஐந்து நாட்களாக சென்னையில் மழை பெய்து பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்ட நிலையிலும் தனியார் அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி கேட்கவில்லை. தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் சென்னையில் எங்குமே உதவிகள் செய்வதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு சில இடங்களில் உதவிகள் இருக்கிறதே தவிர பரவலாக பார்க்க முடியவில்லை.
Recommended Video

பாஜக குற்றச்சாட்டு
ஏன் இந்த முறை இவ்வாறு ஒதுங்கி இருக்கிறார்கள் என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதே நேரம் உதவி செய்யும் நபர்களை திமுக நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். பாஜக பிரமுகர் ஒருவரிடம், இதுபற்றி கேட்டபோது, "அனைத்துமே திமுக அரசு செய்ததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதை செய்யவும் முடியவில்லை" என்கிறார்.

களத்தில் முதல்வர்
அதேநேரம் திமுக வட்டாரத்தில் கேட்டபோது , முன்பைப் போல இப்போதைய முதல்வர் கிடையாது. அவர் தொடர்ந்து மழைக்கு நடுவே மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். முதல்வரே நேரடியாக களத்தில் இருப்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. இதனால்தான் அவர்கள் யாரும் களத்திற்கு வரும் அவசியமில்லாமல் போய்விட்டது , என்கிறார்கள்.

பகிர்ந்து செய்யலாம்
என்னதான் முதலமைச்சர் பம்பரம்போல் சுழன்று பணியாற்றினாலும், அமைச்சர்கள் அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்தாலும், 2015ம் ஆண்டு போல தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த பணியில் இணைத்துக் கொண்டால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறும். அரசு செய்யும் பணிகளை இவர்கள் மூலமாக பகிர்ந்து வழங்கலாம். ஒட்டுமொத்த சென்னையையும் அரசு நிர்வாகம் மட்டுமே கவனித்துக் கொள்வது என்பது இதுபோன்ற இடர்பாடு காலங்களில் சற்று கடினமான விஷயம் என்கிறார்கள் சில சமூக பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications