திசை திருப்பப் பார்க்கிறாங்க.. ஆனால் எதுக்குன்னுதான் புரியலை.. உங்களுக்குப் புரியுதா??
சென்னை: நடக்கிற சில நிகழ்வுகளைப் பார்த்தால் எதையோ திசை திருப்பப் பார்ப்பது போலவே இருக்கு.. ஆனால் எதுக்குன்னுதான் தெரியலை..!
மக்களுக்கு ஒரு கஷ்டம் உள்ளது. எந்தப் பிரச்சினையையும் ஒரு சில நாட்களுக்கு மேல் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத துர்பாக்கியம் அது. அல்லது அவர்களுக்கு நினைவில் இருந்தாலும் கூட அதை மறக்கடிக்கக் கூடிய ஐட்டத்தை அடுத்தடுத்து பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். யார்னு அப்பாவித்தனமா கேட்கறீங்களா.. யாராவதுதான்!
எனவே இயல்பாகவே மறக்க முடியாதவர்கள், இந்த செயற்கை அஸ்திரங்களால் பழையதை மறந்து புதிய பஞ்சாயத்தின் பக்கம் திரும்பி விடுவார்கள்.
மறதி தேசிய வியாதி
எத்தனை பேர் இன்னும் எஸ்.பி.பியை. நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. முக்கால்வாசிப் பேர் அவரை மறந்து விட்டோம்.. அவருக்காக விட்ட கண்ணீர் கூட வற்றிப் போய் விட்டது.. அடுத்தடுத்து என்று ஓட ஆரம்பித்து விட்டோம். இதுதான் வாழ்க்கை இதுதான் இயல்பு. ஆனால் சில விஷயங்களை மறக்க வைக்க சில செயற்கையான விஷயங்களை வலுக்கட்டாயமாக கொண்டு வைத்து திணிப்பார்கள். அதுதான் கொஞ்சம் அபாயகரமானது.
திசை திருப்புவாங்க
நாட்டில் ஏதாவது முக்கியமான ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தால்.. அதைத் தாண்டி ஒரு விஷயம் வந்து விழும்..மக்கள் என்ன செய்வார்கள்.. "நடந்து கொண்டிருக்கும்" விஷயத்தை விட்டு விட்டு, "வந்து விழுந்த" விஷயத்தின் பக்கம் திரும்புவார்கள். இதுதான் திசை திருப்பல்.. திசை திரும்பிய மக்களுக்கு அதற்கு முன்பு நடந்த விஷயம் சுத்தமாக மறந்து போய் விடும்.. அல்லது ஆர்வம் பறி போய் விடும். இதுதான் உலக இயல்பு.
எதுக்கு இந்த பஞ்சாயத்து
இப்போதும் கூட ஒரு திடீர் பஞ்சாயத்தைக் கூட்டி பலரையும் அதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். அதை ஒரு மேட்டராக எடுத்துக் கொண்டு பலரும் படு தீவிரமாக விவாதித்துக் கொண்டுள்ளனர். உப்புப் பெறாத அந்த விஷயத்தை வைத்து "எனது கை என்னை அடிப்பதுவோ.. எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ" என்று துண்டைத் தூக்கி தோளில் போட்டு வாய் பொத்தி குமுறிக் கொண்டுள்ளனர் பலர்.
தவறான இடம்தானே வரும்
ஆனால் இது எதுக்கு திடீரென முளைத்தது என்றுதான் ஆச்சரியமாக உள்ளது. அதாவது இது ஒரு பிரச்சினையே இல்லை. போக வேண்டிய பஸ் ஸ்டாண்ட் வேறு.. நின்று கொண்டிருந்த பஸ் ஸ்டாண்ட் வேறு. அப்படி இருக்கும்போது ஏறும் பஸ்ஸும் கூட தவறாகத்தானே இருக்க முடியும். பிறகு அடடா தப்பு பண்ணிட்டோமே.. என்னதான் இருந்தாலும் அனுபவம் அனுபவம்தாய்யா என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வது புத்திசாலித்தனமாகவும் தெரியவில்லை.
முதல்லேயே செய்திருக்கலாமே
கடைசியில் தப்பாக ஏறிய பஸ்ஸைவிட்டு இறங்கி.. (உண்மையில் தவறாக ஏறிய பஸ்சின் கண்டக்டர் திட்டி வண்டியை நிறுத்தி இறக்கி விட்டுட்டார்).. சரியான பஸ்சில் ஏறி, உரிய முறையில் டிக்கெட்டும் வாங்கி போக வேண்டிய இடத்துக்குப் போயாச்சு.. ஆக.. எல்லாம் சுபமாக முடிந்தது.. ஆனால் ஆரம்பத்திலேயே பஸ் நம்பரை கரெக்டாக பார்த்து சரியாக ஏறியிருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காதே என்றுதான் பலரும் அப்பாவித்தனமாக கேட்கிறார்கள்.. அவர்கள் முதல் பாராவைப் படித்தால் கொஞ்சம் "அனுபவம்" பெறுவார்கள் என்று நம்பலாம்!
என்னவோ போடா மாதவா.. உன்னையைப் புரிஞ்சுக்கவே முடியலை.. கடைசி வரைக்கும்!