தேர்தல் அறிவித்த முதல் நாளே.. திமுக, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய 2 கட்சிகள்.. என்னாச்சு?
சென்னை: யாருமே இப்படி ஒரு திருப்பம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. அதுவும் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே அந்த அதிரடி திருப்பம் அரங்கேறி உள்ளது.
தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான அறியப்படுபவை ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக. எத்தனை கட்சிகள் இந்த தேர்தலில் புதிதாக உதயம் ஆனாலும்.. தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிக் கொண்டாலும்.. போட்டி என்பது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிடையே மட்டும்தான் என்று அடித்துக் கூறி வந்தனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த இரு கட்சிகளுக்கும் களத்தில் உள்ள நிர்வாகிகளின் பலம், தொண்டர் பலம் உள்ளிட்டவைதான் இதற்கு அடிப்படை காரணம்.
ராதிகா அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்றிருந்த கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. திடீரென 'குட்பை' சொல்லிவிட்டு கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார் சரத்குமார். இனிமேல் சின்னத்திரைகளில் கவனம் செலுத்தாமல் முழுநேரமாக அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று சில வாரங்கள் முன்பு ராதிகா அறிவித்ததன் பின்னணி இப்போது உற்று நோக்கப்படுகிறது. இப்படி ஒரு அரசியல் திட்டம் சரத்குமாரிடம் இருப்பதால்தான் ராதிகா இப்படி ஒரு முடிவை எடுத்து உள்ளார் என்கிறார்கள்.
சசிகலாவுடன் சரத்குமார் சந்திப்பு
சமீபத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு வந்தார் சரத்குமார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறிவிடும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்த கேள்வியை முன் வைத்தபோது, சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது என்றார்.
திடீர் வெளியேற்றம்
அமைச்சர் கூறிய ஒரே நாளில் சரத்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அப்படியானால் அதிமுக தலைவர்கள் யாருக்கும் சரத்குமார் கூட்டணியை விட்டு வெளியேறுவது முன்கூட்டியே தெரியாதா அல்லது சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக பெரிதாக கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு பக்கம் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி கடந்த லோக்சபா தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. அந்த கட்சி திடீரென கூட்டணியிலிருந்து வெளியேறியது.
திமுக கூட்டணி கட்சி
முன்பு இந்திய ஜனநாயக கட்சி, பாஜக-அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் சீட்டு விவகாரம் தொடர்பாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இணைந்தார். வெறும் இரண்டு வருடங்களில் அந்த கூட்டணியை முறித்துக் கொண்ட இந்திய ஜனநாயக கட்சி இப்போது மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
சீட் ஒதுக்க விரும்பவில்லை
திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது அடுத்து ஆட்சிக்கு வந்துவிடும்.. என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்சி அங்கே இருந்து வெளியே செல்ல என்ன காரணம்? இதே வழியைப் பின்பற்றி பிற கட்சிகளும் சென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைந்தது போல அமைந்து விடுமே என்ற பேச்சுக்கள் உள்ளன. ஆனால் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் திமுகவுக்கு பெரிய விருப்பம் இல்லை என்று தெரிகிறது. கூட்டணி பற்றி பேசவில்லை. எனவேதான் வேறு வழியின்றி அந்த கட்சி வெளியேறியுள்ளது.
திடீர் திருப்பங்கள்
இதேபோல சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து அதிமுக பேச விரும்பவில்லை. வீணாக சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க திமுக மற்றும் அதிமுக விரும்பவில்லை. எனவே, இந்த கட்சிகள் வேறு வழியின்றி வெளியேறியுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு வரை இப்படி பல்வேறு அதிரடி திருப்பங்களை தமிழக அரசியல் களம் பார்க்க இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.