டெல்லிக்கே எதிர்ப்பு? கை வச்சாலும் சிக்கல்.. ஆஹா.. அதான் அந்த தைரியமா? 24க்கு இப்படி ஒரு ‘செக்’?
பாஜக தலைமையின் இந்த முடிவு 2024 தேர்தல் வியூகங்களில் சறுக்கலை ஏற்படுத்துமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
சென்னை : பாஜக தலைமையின் முடிவுக்கு எதிராக அண்ணாமலை பேசியிருப்பதால், அவரை மாற்றிவிட்டு தமிழ்நாடு பாஜகவுக்கு வேறு தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் இப்போது மாநில தலைவர் மாற்றப்பட்டால் பாஜகவின் 2024 தேர்தல் பிளானில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
கூட்டணி குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி - அண்ணாமலை பனிப்போர்
எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அண்ணாமலை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்கவில்லை. இதனால் பாஜகவும் வேண்டாவெறுப்பாக தனது ஆதரவை தெரிவித்தது. இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால், அது குறித்து அண்ணாமலை கருத்து தெரிவிக்க, பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்க கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டது.

எரிகிற கொள்ளியில் எண்ணெய்
அதற்கு மேலும் எண்ணெய் ஊற்றும் வகையில் தான், அண்மையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜக ஐடி பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் அண்ணாமலை மீது அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு வெளியேறி உடனே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டார். தொடர்ந்து, பாஜகவில் இருந்து நிர்வாகிகளை இழுத்து வருகிறார் நிர்மல் குமார். இதனால், அதிமுக - பாஜக இடையேயான பிரச்சனை வலுவடைந்தது.

நட்டா விருப்பம்
எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை அண்ணாமலை ஆதரவாளர்கள் எரிக்க, பதிலுக்கு அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப் படத்தை எரித்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த இரு கட்சி சீனியர்களும் சமாதான நடவடிக்கையில் இறங்கினர். அண்மையில் கிருஷ்ணகிரி வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகளிடம், அதிமுகவுடன் சமூகமாகச் செல்லுமாறும், அதிமுகவுடன் தான் கூட்டணி தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

கூட்டணி
எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசியபோது, கூட்டணி தொடரும் என்று உறுதியாக கூறி இருக்கிறார். சிடிஆர் நிர்மல் குமாரை நாங்களாக அழைக்கவில்லை. பாஜக மாநிலத் தலைமை மீது அதிருப்தியில் அங்கு இருக்க விரும்பாமல் அவராகவே வந்து சேர்ந்திருக்கிறார். இதனால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை உறுதி கொடுக்கிறேன். எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என ஆர்டர் போட்டுவிட்டோம் எனப் பேசி இருக்கிறார்.

இன்னும் முடியல
இதனால் பாஜக தலைமை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் அண்ணாமலை பிடிவாதமாக நிற்கிறார். அதிமுக நிர்வாகிகள் பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்ததால், கூட்டணி மோதல் சரியாகிவிட்டது என்ற நிலை இருந்தது. ஆனால் அண்ணாமலை, ஈபிஎஸ் உடனான மோதல் சரியாகவில்லை என்பதை தனது பேச்சின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மாநில தலைவர் பதவி
சென்னையில் நடந்த பாஜக மாநில நிர்வாகி கூட்டத்தில் பேசியபோது, தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஐபிஎஸ் பொறுப்பை விட்டு விட்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தேன். சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். சமரசம் செய்து கூட்டணியை ஏற்படுத்தி அதன் வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை. கூட்டணிக்காக சமரசங்கள் செய்து கட்சியை கட்டமைத்து செல்ல இங்கே நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை வழிநடத்தலாம். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புதிய தலைவர்
அதிமுகவுடன் சமூகமாக செல்ல வேண்டும் என்று பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்து இருப்பதையே அண்ணாமலையின் பேச்சு வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்கு அண்ணாமலை உடன்படாவிட்டால் அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படுவார் என்கிறார்கள். அண்ணாமலை விலகினால் அடுத்து யார் மாநில தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகளும் இப்போதே பாஜக வட்டாரத்தில் எழுந்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் டாப்பில் இருக்கிறதாம்.

பாஜகவுக்கு சிக்கல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில தலைவர் பொறுப்பேற்ற அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ச்சியாக பாஜக லைம்லைட்டிலேயே இருந்து வருகிறது. இப்படியான சூழலில் மாநில தலைவர் மாற்றப்பட்டால், பாஜகவின் தேர்தல் திட்டங்களில் தொய்வு ஏற்படும் என்ற கருத்துகளும் பாஜகவில் எழுந்துள்ளன. 2024 தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற விரும்பும் பாஜக தலைமை, அதற்காக அண்ணாமலையை மாநில தலைவராகத் தக்கவைத்துக்கொள்ளவே விரும்பும் என்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications