சசிகலா "அவரை" காப்பாற்றுவாரா.. தேமுதிக அமமுகவில் ஐக்கியமாகுமா... தினகரனுக்கு திடீர் சான்ஸ்!
விஜயகாந்த் அமமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவுக்கு எதிரான சக்திகள் எல்லாம் பிரிந்து போய் 3 கூறுகளாக ஒருங்கிணைவது போல தெரிகிறது. திமுக பக்கம் ஒரு அணி திரள்கிறது. மறுபக்கம் கமல் , தினகரன் மூலமாக இன்னும் இரண்டு அணிகள் உருவாகி வருகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் இந்த முறை எல்லோரும் நினைப்பது போல எளிதாக இருக்காது என்றே அறிகுறிகள் சுட்டிக் காட்டுகின்றன. இதோ தேமுதிக அதிமுக அணியை விட்டு வந்து விட்டது. அடுத்து அது என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக ஏன் வெளியே வந்தது என்பதற்கு காரணத்தை அவர்களே கூறி விட்டனர். கேட்ட நம்பர் கிடைக்கலை, கேட்ட தொகுதியும் கிடைக்கலை என்பதே அவர்களது புகார். 29 தொகுதிகள் வரை கேட்டார்களாம். முடியாது என்று அதிமுக கூறி விட்டதாம்.
"ரூட் கிளியர்".. தைலாபுரத்தில் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு.. காரணம் சாட்சாத் விஜயகாந்த்..!
பாமக
அதிமுகவைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த பாமகவுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி பாமக. ஆனால் தேமுதிக ரொம்பவே மோசமாக செயல்பட்டு சுமார் 2 சதவீத வாக்குகளையே பெற்றது. இது நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியவை பெற்ற வாக்குகளுக்கு சமமாகும். எனவேதான் தேமுதிகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு அதிமுக அடி பணியவில்லை.
3 சாய்ஸ்
தற்போது வெளியே வந்து விட்ட தேமுதிகவுக்கு மொத்தம் 3 சாய்ஸ் இருக்கிறது. ஒன்று தனித்துப் போட்டியிடலாம் அல்லது கமல் கூட்டணியில் இணையலாம் அல்லது தினகரன் கூட்டணியில் இணையலாம். சசிகலா மீது சாப்ட் கார்னர் வைத்துள்ளவர் பிரேமலதா... சசிகலா விடுதலை தொடர்பாக வரவேற்று பேசியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.. சசிகலாவை ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பேன் என்றும் கூறியிருந்தார்.
சசிகலா
இது எல்லாவற்றையும் விட சசிகலாவால்தான், தேமுதிக தனது முதல் அரசியல் கூட்டணியையே அதிமுகவுடன் ஏற்படுத்தியது.. அந்த நன்றி மறவாதவர் பிரேமலதா.. எனவே தற்போது தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் அக்கட்சியை அமமுக கூட்டணியில் இணைத்து தேவையான சீட்டுகளைத் தர சசிகலா உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. தினகரனுக்கும் இதில் ஆட்சேபனை இருக்காது என்றே சொல்லப்படுகிறது.
பலவீனம்
அமமுகவை பொறுத்தவரை அதிமுகவை வரும் தேர்தலில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய இலக்காக உள்ளது. அதிமுகவை பலவீனப்படுத்தினால்தான் தேர்தலுக்குப் பிறகு அதிலிருந்து பல தலைவர்கள் பிரிந்து தங்கள் பக்கம் வருவார்கள், கட்சியை கைப்பற்றுவது எளிதாகும் என்ற கணக்கில் சசிகலாவும், தினகரனும் உள்ளனர்.
எதிர்பார்ப்பு
அந்த வகையில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்து அவர்களிடம் உள்ள வாக்கு வங்கியை வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தி பல தொகுதிகளில் தோல்வி அடையா வைக்கும் முயற்சிக்கும் தினகரன், சசிகலா இறங்கக் கூடும். எது நடக்கப் போகிறது என்பது நாளை தேமுதிக அறிவிக்கவுள்ள முடிவில்தான் தெரிய வரும். பார்ப்போம்..!!