கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை.. எமனின் ஹைவே.. 10 ஆண்டு போராட்டத்துக்கு விடிவு பிறக்குமா?
சென்னை: ஒரு சாலையை 10 பத்து வருடங்களாக போட்டுக்கொண்டிருக்கும் மாநிலம் தமிழகமாகத் தான் இருக்கும்.
Recommended Video
இந்த சாலையில், பயணிப்பது என்பது, எமன் முதுகில்ல மல்லாக்க படுத்து செல்வதற்கு சமம். ஆம் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையைத் தான் சொல்கிறோம்.
இந்த சாலை விரிவாக்க பணிகள், எப்போது தொடங்கியது தெரியுமா? 2011ம்ஆண்டில்.. இப்போது 2021.. இன்னமும் இங்கு சாலைகளை மரணப் பள்ளங்களாக உள்ளன.
9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட்நியூஸ்!
எகிறிய செலவு
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு, டெண்டர் எடுத்த தொகையை விட, செலவு அதிகமானதாக கூறி, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் தான் இந்த தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறிவிட்டது. மோசமான இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள், விபத்துகளில் சிக்கி, அடிக்கடி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
முற்றிலும் சேதம்
இதன்பிறகு, கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையை சீரமைக்க, தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு 7 கோடியே 83 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிதியைக் கொண்டு சாலையை சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. அதன்பிற்கு, கிருஷ்ணகிரியில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வரை உள்ள சாலை, பல இடங்களில் முற்றிலும் சேதமானது. புதிதாக சீரமைக்கப்பட்டு போடப்பட்ட தார் சாலைகள், பல இடங்களில் குண்டும் குழியுமானது.
லாயக்கற்ற சாலை
குறிப்பாக, கிருஷ்ணகிரி அடுத்த சூளாமலையில் இருந்து, சின்னபனமுட்லு, அஞ்சூரில் இருந்து கொல்ரூர் பிரிவு சாலை, ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியில் சாலை மிகவும் சேதமாகி, பெரிய அளவில் பள்ளங்களாக உருமாறி போக்குவரத்திற்கு ஒரு பெர்சன்ட் கூட பயனில்லாத சாலையாக மாறியது.
700க்கும் மேற்பட்ட மரணம்
சாலை இவ்வளவு மோசமாக உள்ளதால், கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு வாகனங்களில் செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தாமல், கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை வழியாக, சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
அந்த சாலையை விட
இதில் என்ன கொடுமை என்றால், தேர்தல் காலத்தில் கூட இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போதும், இங்கு நெடுஞ்சாலை பணிகளை விரைந்து சரி செய்ய மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. இன்னமும் இங்கு சாலைகள் பயணிக்க தகுதியற்றதாகவே உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இங்கு டெல்டா பகுதியின் தஞ்சை - கும்பகோணம் மரண சாலையை விட மோசமாகவும், ஆபத்தாகவும் உள்ளது.
விரைவில் நிறைவடையும்
எனினும், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய திருவாண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் 10 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவித்திருந்தார்.
செஞ்சு காட்டுங்க
திமுக சார்பில் திருவண்ணாமலை வேட்பாளராக எ.வ.வேலுவும், கிருஷ்ணகிரி வேட்பாளராக செங்குட்டுவனும் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்பி அசோக்குமார் இங்கு களம் காண்கிறார். அதேசமயம், திருவண்ணாமலையில் பாஜக களமிறங்குகிறது. இங்கு பாஜக வேட்பாளராக தணிகை வேல் களமிறங்குகிறார். இதில், திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை பணிகள் விரைவில் துரிதப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களும் இதே வாக்குறுதியை அளித்துள்ளனர். இதற்கு, வாக்குறுதியை பேச்சில் காட்டாமல் வீச்சில் செயல்படுத்தி காட்டுங்கள் என்பதே இப்பகுதி மக்களின் நேரடி கமெண்ட்டாக உள்ளது.