"மூத்தவங்க எல்லாம் வாங்க".. ஓபிஎஸ் அஸ்திரத்தை எடுத்து! அவருக்கே திருப்பி தந்த எடப்பாடி? செம ட்விஸ்ட்
சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் அஸ்திரம் ஒன்றை அவருக்கு எதிராகவே பயன்படுத்தும் திட்டத்தில் இருக்கிறதாம்.
Recommended Video
அதிமுகவில் எப்படியாவது.. எதையாவது செய்து ஒற்றை தலைமை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயன்று கொண்டு இருக்கிறார். எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தரப்பு தீர்க்கமாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு எப்படியாவது தடை வாங்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசனை செய்து வருகிறது. இந்த தேதியை ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கவில்லை என்று கூறி, அதற்கு தேர்தல் ஆணையம் வழியாக தடை வாங்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருகிறதாம்.

அழைப்பு இல்லை
கடந்த வாரம் நடந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. பொதுவாக அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுவது எம்ஜிஆர் காலத்தில் இருந்து வழக்கம். கட்சியில் பொதுக்குழுவில் இல்லாத மூத்த உறுப்பினர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால் கடந்த முறை பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை.

இதற்கு முன் அழைப்பு இல்லை
இதற்கு முன் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பொதுக்குழுவிலும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை. அப்போது சசிகலாவிற்கு எதிராக கட்சியில் சிலர் குரல் கொடுத்தனர். அதோடு சசிகலா அவசர அவசரமாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனால் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை. அதன்பின் கடந்த பொதுக்குழுவில்தான் சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி கூட்டம் நடத்தப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை
கடந்த பொதுக்குழுவிற்கு முன்பாகவே ஓபிஎஸ் தரப்பு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாமல் இதுவரை கூட்டம் நடந்தது கிடையாது. சசிகலா தரப்பில் நடந்த கூட்டத்தை தவிர மற்ற அனைத்திலும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதுதான் வழக்கம். இந்த முறையும் இதனால் அழைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் எடப்பாடி தரப்பு இதை கேட்டுக்கொள்ளவில்லை. சிறப்பு அழைப்பாளர்கள் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எண்ணி ஓபிஎஸ் தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது.

கோர்டில் கோரிக்கை
ஆனால் எடப்பாடி தரப்பு ஓபிஎஸ் தரப்பு வைத்த இந்த கோரிக்கையயை ஏற்கவில்லை. பின்னர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் இதை பற்றி வெளிப்படையாக பேசினார். வைத்தியலிங்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதோடு உயர் நீதிமன்ற விசாரணையிலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை என்று கூறி வாதம் வைத்தது.

எடப்பாடி தரப்பு முடிவு
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக தலைமைக் கழக கூட்டம் நடந்தது. இதில் பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது தொடர்பாக பேசி உள்ளனர். என்ன அழைக்கலாமா வேண்டாமா.. என்ன முடிவு எடுக்கலாம் என்று பேசி உள்ளனர். அதேபோல் மண்டபம் தேர்வு செய்வது, எப்போது அழைப்பிதழ் அனுப்பலாம் என்பது பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். இறுதியில் பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேசினாரா?
அதன்படி நம்முடைய ஆதரவாளர்களை அழைப்போம். ஓபிஎஸ் சசிகலாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்று பலருக்கு தெரியும். அதேபோல் அவர் டெல்லி போய் பாஜக தலைகளை பார்த்ததையும் பல அதிமுக மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. இதை எல்லாம் சொல்லி ஓபிஎஸ்ஸுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டு மூத்த தலைகளை பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்போம். எடப்பாடியின் 4 வருட ஆட்சி, கொங்கு மண்டல வெற்றி இதை எல்லாம் சொல்லி சிறப்பு அழைப்பாளர்களை அழைப்போம்.

பேச்சாளர்கள்
கட்சி பேச்சாளர்கள் பலர் எடப்பாடி பக்கம்தான் உள்ளனர். நம் பக்கம் இருக்கும் மூத்த நிர்வாகிகளையும் தேடி பிடித்து அழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாம். பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசினாலும் கூட அவர்கள் கண்டிப்பாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராகத்தான் பேச வேண்டும்.. அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கலாம் என்ற முடிவில் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம்.அதாவது சிறப்பு அழைப்பாளர்கள் என்ற ஓபிஎஸ் அஸ்திரத்தை அவருக்கு எதிராகவே திருப்ப எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாம்... விரைவில் இதற்கான அழைப்பு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications