சசிகலா தனி ரூட்.. 'செட்டாக மாட்டாரே’.. கிளம்பும் டவுட்! ஓபிஎஸ் டீமில் இப்படி ஒரு கணக்கு இருக்காம்!
சென்னை : அதிருப்தியில் இருக்கும் அனைவரையும் கட்சியில் இணைப்பதாக பேசி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை சசிகலா முதலில் ஏற்பாரா எனும் கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இதற்கு விடையாக ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எனக் கூறி வரும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமையும் அதிமுகவில் அப்படிக் கூறமாட்டார், ஜெயலலிதாவே முதல்வராக்கிய ஓபிஎஸ்ஸின் தலைமையை சசிகலாவும் ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஜெயலலிதா சட்டசபையில் இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவராக்கி, அவரது தலைமையில் செயல்பட்டார். சசிகலாவும் அதன்படியே, ஓபிஎஸ்ஸின் தலைமையை ஏற்க மறுக்க மாட்டார் எனத் தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவில் குழப்பம்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் அதிகார மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டினர். தினகரன், தனது அமமுக கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறி வருகிறார். சசிகலாவோ ஓபிஎஸ் விருப்பத்திற்கு ஓகே சொன்னாலும், தான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி வரும் அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்பாரா என்ற குழப்பம் இருந்து வருகிறது.

எழும் முக்கிய கேள்வி
ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே 2017ல் சசிகலா குடும்பத்தின் ஏகபோக ஆதிக்கத்தை எதிர்த்து தான் தர்மயுத்தம் செய்தார். இப்போது ஈபிஎஸ் உடன் ஏற்பட்டிருக்கும் மோதலால் தர்மயுத்தம் 2.0 நடத்தி வருகிறார் ஓபிஎஸ். இப்போது சசிகலா, ஓபிஎஸ்ஸின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டாலும், அரசியல் முரண்பாடுகள் இருப்பதால், ஓபிஎஸ் தலைமையில் சசிகலா செயல்படுவதை ஏற்றுக்கொள்வாரா எனும் கேள்விகளும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுகின்றன.

ஓபிஎஸ் விருப்பம்
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் இணையவேண்டும் என ஓபிஎஸ் கூறி வருகிறார். அதற்காகவே, கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி கட்சியை குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார். எடப்பாடியின் எண்ணம் உச்ச நீதிமன்றத்தில் தவிடுபொடியாகும். டிடிவி தினகரன், சசிகலா, இதர கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணியை ஓபிஎஸ் அமைப்பார் எனக் கூறி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சசிகலா பொதுச் செயலாளரா
சசிகலாவையும், கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களையும் கட்சியில் இணைப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதே நேரம், சசிகலாவோ, அதிமுக பொதுச் செயலாளரே நான் தான் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. சசிகலாவை கட்சியில் இணைத்தால் கூட அவர் எப்படி ஓபிஎஸ்ஸின் கீழ் செயல்படுவார்? அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவாரா? எனும் கேள்விகள் எழுகின்றன.

தலைமைப் பண்பு
அதற்கு, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த கண்ணன் ஜி ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். அதாவது, மாற்று சிந்தனைகள் கொண்டவர்களையும் இணைத்து ஒத்த சிந்தனையோடு ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது தான் நல்ல தலைமைப் பண்பு கொண்டவரின் இயல்பு. ஓ.பன்னீர்செல்வம் அதனைச் செய்து காட்டுவார். யாருக்கும் மனக் கசப்பு இல்லாத வகையில், சிறப்பான தலைமைப் பொறுப்பை ஓபிஎஸ் வகிப்பார், அப்படி ஒரு சம்பவம் விரைவில் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவே ஏற்றுக்கொண்ட தலைவர்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையை சசிகலா ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழும்போது அதற்குச் சான்றாக ஒரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார் கண்ணன் ஜி. ஜெயலலிதா இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலாவும் தானே முதல்வராக ஏற்றுக்கொண்டார். ஒரு முறை அல்ல, இருமுறை ஜெயலலிதாவாலேயே முதல்வராக பொறுப்பு வழங்கப்பட்டவரை அவரது தோழியான சசிகலா எப்படி ஏற்காமல் இருப்பார்?

சசிகலாவுக்கு உரிய மரியாதை
2006ல் ஜெயலலிதாவும் எம்.எல்.ஏவாக இருந்தபோதே, எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் நியமித்தார் ஜெயலலிதா. அவரின் கீழ் தான், ஜெயலலிதா உட்பட சட்டமன்ற அதிமுக கட்சியே செயல்பட்டது. ஆகவே, ஜெயலலிதாவே ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ்ஸின் தலைமையை சசிகலாவும் ஏற்றுக்கொள்வார். அதேபோல சசிகலாவுக்கு உரிய மரியாதையை ஓபிஎஸ் வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications