Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் ‘ப்ரஷர்’.. இடைத்தேர்தல் பரபர ட்விஸ்ட்.. ஓபிஎஸ் ‘டார்கெட்’ இதான்.. விளக்கும் தராசு ஷ்யாம்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முடங்கினால் பாதிப்பு வருமா என்பது பற்றி பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் நாளுக்கு நாள் ட்விஸ்ட்டுகள் நடந்து வருகின்றன. முதலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொன்ன ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர் ஆனார். அதிமுக கூட்டணியில் முன்பு போட்டியிட்ட தமாகா அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக நமது ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

அதிமுகவின் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும், இனி நீதிமன்றத்தை நாடினால் பலன் கிடைக்குமா என்பது பற்றி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குழப்பங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு :

 இரட்டை இலை அவ்வளவுதானா?

இரட்டை இலை அவ்வளவுதானா?

கேள்வி : அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் இடைத்தேர்தலில் களமிறங்குவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் இருக்கிறது. என்ன நடக்கும்?

பதில் : உச்ச நீதிமன்றத்தில் இனி உடனடியாக சின்னம் கோரி மனு அளித்தாலும், இடைத்தேர்தலுக்குள் அதில் தீர்வு கிடைக்காது. காரணம், நாளை குடியரசு தினத்திற்கு விடுமுறை. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தான் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன்களை எடுப்பார்கள். பிற நாட்களில் இறுதி வாதங்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள். சனிக்கிழமைகளில் தீர்ப்பு எழுதுவார்கள். இரு நீதிபதிகள் அமர்வு என்றால் ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதுவார், அதன்பிறகு அந்த தீர்ப்பை மற்ற நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். அவர் அதைப் படித்துப் பார்த்து அவருக்கு இசைவாக இல்லை என்றால் மாற்று தீர்ப்பு எழுதலாம். இந்த நடைமுறை முடிவடையவே சில நாட்கள் ஆகும். அந்த கால அவகாசம் இப்போது இல்லை. எனவே உச்ச நீதிமன்றத்தில் எந்த ஆணையும் உடனடியாக வர வாய்ப்பில்லை.

 சிங்கம் சின்னம் - எம்ஜிஆர் கேட்ட ஓட்டு

சிங்கம் சின்னம் - எம்ஜிஆர் கேட்ட ஓட்டு

ஆகவே, ஒரே வழி தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் வேண்டுமென்றால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்து போடவேண்டும். ஒருவர் கையெழுத்து போட்டு ஏ ஃபாம், பி ஃபார்ம் கொடுத்தால் அது செல்லாது. சமீபத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சுயேட்சையாகப் போட்டியிட்டனர். இதற்கு எம்.ஜி.ஆர் காலத்திலேயே பழைய முன்னுதாரணமும் இருக்கிறது. இதே கொங்கு மண்டலத்தில் 1977ல் தாராபுரம் தொகுதியில் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் சரியாகப் போய்ச் சேரவில்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணன். அவருக்கு ஏ ஃபார்ம், பி. ஃபார்ம் போய்ச் சேரவில்லை. ஆனால், இன்னொரு வேட்பாளர் அய்யாசாமிக்கு அந்த ஃபார்ம்கள் கிடைத்துவிட்டன. அதை வைத்து அவர் இரட்டை இலை சின்னத்தை வாங்கிவிட்டார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு 'சிங்கம்' சின்னம் கிடைத்தது. எம்.ஜி.ஆரே இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள், சிங்கம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என பிரச்சாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார்.

 ஈபிஎஸ்ஸுக்கு அத்துப்படி

ஈபிஎஸ்ஸுக்கு அத்துப்படி

கேள்வி : இப்போது இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பதில் : இரட்டை இலை சின்னம், கிராமப்பகுதிகளில் அதிக செல்வாக்கு நிறைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி நகர்ப்புறத் தொகுதி. சமீபத்தில் நகர்ப்புற தொகுதியான ஆர்கே நகர் இடைத்தேர்தலில் புதிய சின்னமான குக்கர் சின்னத்தை 15 நாட்களுக்குள் வாக்காளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து இரட்டை இலையையும், உதயசூரியனையும் சேர்த்து தோற்கடித்தார் டிடிவி தினகரன். அப்படியென்றால், அந்தளவுக்கு ஒரு நெட்வொர்க் இருக்க வேண்டும். அப்படியான நெட்வொர்க்கை அமைத்துவிடலாம் என நம்பிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும். தேர்தல் நெளிவு சுளிவுகள் ஈபிஎஸ்ஸுக்கு அத்துப்படி. அதனால், ஈபிஎஸ் நம்பிக்கையாக இருக்கிறார்.

 ஓபிஎஸ்ஸுக்கு விருப்பம் இல்லை

ஓபிஎஸ்ஸுக்கு விருப்பம் இல்லை

அதேசமயம், ஓபிஎஸ் கொஞ்சம் நம்பிக்கை குறைவானவராக காணப்படுகிறார். ஆரம்பத்திலேயே, பாஜக நின்றால் நாங்கள் ஆதரவு தருவோம் என்கிறார். ஆக, பாஜக நிற்கவேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புவதாகத்தான் கருத வேண்டியுள்ளது.
1. ஓபிஎஸ்ஸுக்கு கொங்கு மண்டலத்தில் இயல்பான செல்வாக்கு இல்லை.
2. ஓபிஎஸ் அணியில் இந்த இடைத்தேர்தலில் நிற்க தகுதியான வேட்பாளர் இல்லை.
3. இந்த தேர்தல் தென் மாவட்டத்தில் வந்திருந்தால் பாஜக நின்றால் ஆதரவளிப்போம் என்று நிச்சயமாக சொல்லியிருக்க மாட்டார். இப்போது இடைத்தேர்தல் வந்திருக்கும் தொகுதி ஓபிஎஸ்ஸுக்கான தொகுதி அல்ல, எனவே பாஜக நின்றால் வெற்றியோ, தோல்வியோ அவர்களோடு போகும். நமக்கு சிக்கல் வராது என்று நினைக்கிறார்.

 ஓபிஎஸ் கணக்கு

ஓபிஎஸ் கணக்கு

கேள்வி : எடப்பாடி பழனிசாமி இந்தஇடைத்தேர்தல் மூலம், தனக்குத்தான் அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவு என நிரூபித்து விட்டால் ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

பதில் : ஓபிஎஸ் எதை எதிர்பார்க்கிறார் என்றால், ஆர்கே நகரில் நடந்தது போல, சின்னம் நிறுத்தி வைக்கப்பட்டு, இருவரும் இரு அணிகளாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும், அதிமுக சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தால், அதிமுக அதிகாரப்பூர்வமாக 2 அணிகளாக கருதப்படும். அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்பது போல மீண்டும் தேர்தல் ஆணையத்தால் இரு அணிகளும் வகைப்படுத்தப்பட்டு இருவருக்கும் தனித்தனி சின்னம் வழங்கப்படும். அடுத்த தேர்தல் வரும் வரை இந்த பேனர் தனக்கு உதவியாக இருக்கும் என்பது ஓபிஎஸ்ஸின் கணக்காக இருக்கக்கூடும்.

 பாஜக யாரை ஆதரிக்கும்

பாஜக யாரை ஆதரிக்கும்

கேள்வி : அதிமுக தான் பெரிய கட்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு வருகிறார். அண்ணாமலை குறிப்பிடும் அதிமுக எது? இடைத்தேர்தலில் பாஜக எந்த அணியை ஆதரிக்க வாய்ப்பு?

பதில் : அண்ணாமலை சொல்வது ஒன்றுபட்ட அதிமுகவைத்தான். ஏனென்றால், பாஜக தேசிய தலைமை அதைத்தான் விரும்புகிறது. கடைசி நேரம் வரை அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்யும். இரு தரப்புமே வேட்பாளரை நிறுத்தினால் பாஜகவுக்கு 2 ஆப்ஷன்கள் தான் இருக்கின்றன. 1. அவர்களே ஒரு வேட்பாளரை நிறுத்துவது. பாஜக நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்வதால் அவர்கள் தனியாக தேர்தலில் நின்று பலத்தைக் காட்டுவதே சரியானது. பாஜக தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டு தன் வலிமையை நிரூபிக்க வேண்டும். 2. தெளிவாக யாரையேனும் ஒருவரை ஆதரிப்பதாகச் சொல்வது.

 அண்ணாமலை - தலைவர்

அண்ணாமலை - தலைவர்

கேள்வி : கொங்கு மண்டலம் பாஜக வலிமையாக இருப்பதாக கூறி வரும் சூழலில், அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறதா?

பதில் : அப்படி போட்டியிட்டால் தான் அவர் வலிமையான தலைவர். தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடும் பலம் இருப்பவர்தான் தலைவர். கருணாநிதி, ஜெயலலிதா என யாராக இருந்தாலும் அதுதான். 1991ல் ஜெயலலிதா காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டார். பர்கூரில் போட்டியிட்டார். மாநிலம் தழுவிய கட்சியின் தலைவர் தமிழ்நாட்டின் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். அண்ணாமலை தான் பெரிய தலைவர் என்று சொல்லி வருகிறார் என்றால், அதை நிரூபிக்கும் வாய்ப்பு தேர்தல் மூலம் தான். இந்த தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது 30% வாக்குகள் பெற்றால் அவர் வலிமையான தலைவர் என்று ஒப்புக்கொள்ளலாம்.

 களமிறங்கிய அமைச்சர்கள்

களமிறங்கிய அமைச்சர்கள்

கேள்வி : திமுக அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவில் பல முக்கியமான அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்டில் இவ்வளவு மும்முரமாக திமுக இறங்க என்ன காரணம்?

பதில் : திமுகவைப் பொறுத்தவரை இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு வெள்ளோட்டம். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் அதைவிட வேறு பெரிய ஆபத்தே கிடையாது. எனவே, திமுகவுக்கு இந்த தேர்தலில் பெறும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். இந்த முறை திமுகவுக்கு தேவை வெறும் வெற்றியல்ல, மிகப்பெரிய வித்தியாசம் வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கும். இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது சகஜம் எனச் சொன்னாலும், வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த கடுமையாகப் பணியாற்றுவது வழக்கம் தான்.

கேள்வி : காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்பது களத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளதா? தொண்டர்கள் ஆர்வமாகப் பணியாற்றுவார்களா?

பதில் : ஈவிகேஎஸ் இளங்கோவன் அனைத்து தரப்பினருடனும் பழகக்கூடியவர். எனினும், உடல்நிலை, வயது ஆகியவை அவர் தேர்தலில் நிற்க விரும்பாததற்குக் காரணம். அவரும் ஆரம்பத்தில் தான் நிற்கவில்லை என்றுதான் கூறி வந்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், கண்டிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக தகவல் வந்தது. இளங்கோவன் வீட்டுக்குச் சென்றே அவர் கேட்டுக்கொண்டார். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்று சட்டப்பேரவைக்குச் சென்றால் காங்கிரஸ் கட்சியில் அவர் சீனியராக இருப்பார். அதனால் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படுமா என்பதெல்லாம் அடுத்தகட்ட அரசியல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+