விஜயதசமி நாளில் கோவில்கள் திறக்கப்படுமா? ஹைகோர்ட்டில் வழக்கு நாளை விசாரணை
வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள், மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழிபட அரசு தடை விதித்துள்ளது. வார விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய உத்தரவிடக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. நவராத்திரி பண்டிகையின் முக்கிய அம்சமான ஆயுதபூஜை பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15ஆம் தேதி விஜயதசமி பண்டிகையாகும். வெள்ளிக்கிழமை வருவதால் அன்றைய தினம் கோவில்கள் மூடப்பட்டிருக்கும் சாமி தரிசனம் செய்ய முடியாது எனவே விஜயதசமி நாளில் கோவில்களைத் திறக்கக் கோரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் தாக்கல்.செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோவிலை திறக்காமல் பிடிவாதமாக இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று தாக்கல் செய்துள்ள மனு நாளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications