தள்ளிப் போகிறதா தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்? சென்னை உயர்நீதிமன்றத்தில் 24-ம்தேதி விசாரணை
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை
இதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எனவே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை உச்சம் பெற்றுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு.வில் நோயாளிகள் அனுமதியும் அதிகரிக்கிறது என்று மனுவில் அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி எழுப்பிய கேள்வி
மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்துள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ''உச்ச நீதிமன்றம் ஜனவரி 27-க்குள் இது தொடர்பான அறிவிப்பாணை வெளியிட ஆறிவுறுத்தியுள்ளதே?'' என்று பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

திங்கள்கிழமை
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற திங்கள்கிழமை(24-ம் தேதி) ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம் இதுதொடரான அனைத்து வழக்குகளும் அன்றைய தினம் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.












Click it and Unblock the Notifications