ஆன்லைன் ரம்மி ஆடி 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை இழந்த இளம்பெண்..கடன் தொல்லையால் தற்கொலை
ஆன்லைன் ரம்மி ஆடியதால் கடனில் சிக்கிய பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதோடு பல லட்சம் கடன் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் பவானி என்பதாகும். 29 வயதான பவானி சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பவானி நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் ரம்மி
பவானி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் நிறுவன ஊழியரான பவானி என்பவர் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் மற்றும் கணவர் கண்டித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி பவானி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

நகை, பணத்தை இழந்த பவானி
ரம்மி விளையாட்டில் 20 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. துவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடியதும் மேலும், தமது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தகவலை தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்று குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தற்கொலைகள்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறதுது. இது உடனடியாக தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் 2 குழந்தைகளின் தாய் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications