EXCLUSIVE: என்னை தொட்டு பாஜக பிரமுகர் தள்ளிவிட்டாரு.. பாஜகவினர் யாருமே உதவல -பெண் செய்தியாளர் புகார்
சென்னை: பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பாஜக பிரமுகர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக நின்ற பெண் பத்திரிகையாளரை தொட்டு தள்ளிவிட்டு மைக்கை பிடுங்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.
பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல் பாஜகவை கதிகலங்கவைத்துள்ளது- குவியும் பாராட்டுகள்!
பாஜக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டு நின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும் ஆங்காங்கே திரண்டிருந்தனர்.
பெண் பத்திரிகையாரிடம் சீண்டல்
சுவாமி சிவானந்த சாலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாஜகவை சேர்ந்த பிரமுகர் பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக சக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர். செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் அவர் கையில் வைத்திருந்த மைக்கை பிடுங்கி தகாத முறையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
பெண் பத்திரிக்கையாளர் சொல்வது என்ன?
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர் "பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்காக நானும் மற்றொரு பெண் பத்திரிகையாளும் அங்கு நின்றுகொண்டிருந்தோம். அப்போது அவரை வரவேற்க ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டிருந்தார்கள். அந்த கூட்டத்திற்குள் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அப்போது அங்கிருந்தவர்களிடம் சற்று தள்ளி நிற்குமாறு கேட்டுக்கொண்டோம்.
தகாத முறையில் நடந்துகொண்ட பாஜக பிரமுகர்
எங்களுக்கு யாருமே வழிவிடவில்லை. மீண்டும் மீண்டும் சொன்னபோது அங்கிருந்த பாஜக பிரமுகர் ஒருவர் எங்களிடம் கோபமாக வந்து, ஒதுங்கிப்போக முடியாது என மறுத்தார். நாங்கள் செய்தியாளர்கள் என்று சொன்னபோது, நீ என்ன பெரிய ஆளா? நான் பாஜக மாவட்ட பொறுப்பாளர். பிரதமரை பார்ப்பதற்காகதான் இவ்வளவு செலவழிச்சு வந்திருக்கோம். அதெல்லாம் தள்ளிப்போக முடியாது. இந்த மைக்கை வைத்திருந்தால் உங்களுக்கு நாங்க வழிவிடனுமா?' என்று கூறி என்னை தொட்டு ஆவேசமாக சேனல் மைக்கை பிடுங்கி தள்ளிவிட்டார்.
உதவி செய்யாத பாஜகவினர்
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாஜகவினர் யாருமே எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதற்குள் பிரதமர் மோடியின் கான்வாய் வந்தால் எல்லோரும் அதில் கவனம் செலுத்த, என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்ட அந்த பாஜக பிரமுகர் அங்கிருந்து சென்றுவிட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரளிப்பது தொடர்பாக பேசி வருகிறோம்." என்றார்.
பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
பாஜக பிரமுகரின் இச்செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, "பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளரிடம் படத்தில் உள்ள பாஜக பிரமுகர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். தமிழ்நாடு பாஜக இவர் யார் என்று சொல்ல மறுக்கிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பதிலளிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டு உள்ளது.