கும்மிருட்டு.. பாழடைந்த கிணற்றில் அலறல் சத்தம்! பெண்ணை விரைந்து மீட்ட சென்னை தீயணைப்பு வீரர்கள்
சென்னை: மூலக்கடை பேருந்து நிலையம் அருகே பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்பு படை வீரர்கள் உயிரோடு பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் உடனுக்குடன் தீயணைப்புத்துறை, காவல்துறையை அழைத்ததால் கிணற்றில் விழுந்த பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சென்னை அருகே மீஞ்சூர் நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. 38 வயதான இவர் பெரம்பூரில் உள்ள தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தையல் தொழிலாளியான விஜயலட்சுமி வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக மூலக்கடை பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கிருந்து மீஞ்சூர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த விஜயலட்சுமி, உடல் உபாதைக்காக அருகே இருந்த இருட்டான பகுதிக்கு சென்று இருக்கிறார்.
பாஜகவில் மனைவி! காங்கிரஸில் சகோதரி! குஜராத்தில் ஒரேதொகுதியில் களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா குடும்பம்
கிணற்றில் விழுந்த பெண்
ஆள் நடமாட்டம் குறைவான அந்த பகுதியில் கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் இருந்து இருக்கிறது. இருட்டில் சென்ற விஜயலட்சுமிக்கு கிணறு இருப்பது தெரியாமல் அதில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் விழுந்த விஜயலட்சுமி தன்னை காப்பாற்றுமாறு அலறி சத்தம்போட்டு உள்ளார்.
பொதுமக்கள் உதவி
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் அங்கிருந்த மக்களுக்கு கேட்டு இருக்கிறது. பாழடைந்த கிணற்றுக்குள் பெண் ஒருவர் தவறி விழுந்ததை கண்ட பொதுமக்கள் உடனே மாதவரம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.
மீட்ட தீயணைப்பு துறை
உடனே மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் போலீசாரும், மாதவரம் தீயணைப்பு துறை அதிகாரி அரவிந்தன் தலைமையிலான வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தவறி விழுந்த விஜயலட்சுமியை மீட்க தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு மூலம் விஜயலட்சுமியை லாவகமாக மேலே தூக்கி மேலே கொண்டு வந்தனர்.
கால் முறிவு
இதனால் விஜயலட்சுமியும் பொதுமக்களும் ஆறுதல் அடைந்தனர். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காரணத்தால் விஜயலட்சுமிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.