தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்.. மாரிதாஸ் பகீர் கருத்து
சென்னை: தமிழ்நாடு மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று வலதுசாரி ஆதரவாளருமான மாரிதாஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மாநில பிரிவினை வாதம் பற்றி பேசிய இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விஸ்தரிப்பு செய்யப்பட்டது. 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

மத்திய அமைச்சர் முருகன்
தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவரான முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அவர் மீன்வளத்துறை, கால்நடைத்துறை இணை அமைச்சர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கொங்கு நாடு
புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற ஒவ்வொருவருக்கும் பயோடேட்டா வெளியிட்டது மத்திய அரசு. அதில் அமைச்சர்களின் பெயர், வயது, கல்வித்தகுதி, எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் முருகன் தொடர்பான பயோடேட்டா அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதற்கு பதிலாக கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது.

பாஜக பதிலடியா
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை தனியாகப் பிரித்து ஒரு மாநிலம் உருவாக்கியதை போல இந்தப் பெயர் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். இப்படி அழைப்பது பிரிவினைவாதத்தை தூண்டுவதை போல இருக்கிறது என்பது பாஜக தலைவர்கள் குற்றச்சாற்று ஆகும். ஆனால் திமுக தலைவர்கள் ஒன்றிய அரசு என்று அழைப்பதே நிறுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் கொங்கு நாடு என்று முருகன் பயோடேட்டாவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்தன. கொங்கு நாடு என்பது ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கான பதிலடியாக பாஜகவால் முன்வைக்கப் படுகிறது என்ற பேச்சுகள் எழுந்தன.

மாரிதாஸ் ட்விட்டர் பதிவு
தமிழ்நாட்டை தனித்தனி பகுதிகளாக பிரிந்திருப்பது மாநிலப் பிரிவினை வாதத்தைபோல இருக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தான் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து இருக்கிறார். "அகதிகள் போல் தென் மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு காலம் காலமாக திரிய காரணம் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதே ஆகும். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டது நிர்வாக தேவைக்கு! அந்த நிர்வாகம் சீராக வளர்ச்சி தரவில்லை என்றால் 3மாநிலங்களாக தமிழகம் பிரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்." இவ்வாறு மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கண்டனம்
நேற்று கொங்கு நாடு என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று மாரிதாஸ் இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்திருப்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால் மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைக்கிறீர்களா என்று திமுக ஆதரவு நெட்டிசன்கள் மாரிதாசுக்கு கேள்வி எழுப்புவதை பார்க்கமுடிகிறது.

பிரிவினைவாதம் பேசக்கூடாது
இன்னும் சில நெட்டிசன்கள், நமது நாட்டில் வேலை இல்லாமல் பலரும் அகதிகளைப் போல வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படியென்றால் மாநிலங்களை தனிநாடாக பிரிக்க முடியுமா? இது என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்த சர்ச்சை ட்வீட் காரணமாக சூடாகி கிடக்கிறது இணையம்.












Click it and Unblock the Notifications