செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி செந்தில் குமார் என்பவர் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது தவெக வேட்பாளருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுகவும், கோவை தெற்கு தொகுதியிலும் பாஜகவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர். கடந்த முறை கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

இதற்கு முக்கிய காரணம் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அங்கு போட்டியிட்டது தான். இருப்பினும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை, வானதி சீனிவாசன் வீழ்த்தியிருந்தார்.
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி
இந்த முறை வானதி சீனிவாசன் கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்கு மாறிவிட்டார். கோவை வடக்கு தொகுதியில் வென்ற அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார். இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில் கோவை தெற்கு தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கி உள்ளார். செந்தில் பாலாஜி கரூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் தற்போது அவர் கோவை தெற்கில் களமிறங்கி உள்ளார். கொங்கு மண்டல திமுகவின் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி உள்ள நிலையில் அவர் கோவை தெற்கில் போட்டியிடுகிறார்.
முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?
கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மொத்தம் 61 வேட்புமனுக்கள் தாக்கலாகின. இதில் 17 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 13 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதனால் தற்போது 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுகவின் செந்தில் பாலாஜி, அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் தவிர இந்த தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கோகுல கிருஷ்ணன் களமிறங்கி உள்ளனர். இவர்கள் தவிர மற்றவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
தவெக வேட்பாளருக்கு சிக்கல்
இந்த தொகுதியில் விஜயின் தவெக சார்பில் வி. செந்தில் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தான் விஜயின் தவெக வேட்பாளர் பெயரில் கோவை தெற்கில் மேலும் 2 பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். அதன்படி வி. செந்தில்குமார், எம் செந்தில் குமார் என 2 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதால் இருவரும் போட்டியில் உள்ளனர். இதில் ஒருவரின் பெயர் இனிஷியல் உள்பட அப்படியே தவெக வேட்பாளர் வி செந்தில் குமாருடன் பொருந்தி போகிறது.
மேலும் பி செந்தில்குமார் என்பவரின் வேட்புமனு ஏற்கப்பட்டாலும் கூட அவர் தனது மனுவை வாபஸ் வாங்கினார். அவர் வாபஸ் வாங்காவிட்டால் தவெக வேட்பாளர் செந்தில்குமார் பெயரில் கூடுதலாக 3 பேர் களத்தில் இருந்திருப்பார்கள். ஆனால் தற்போது தவெக வேட்பாளர் செந்தில் குமார் பெயரில் கூடுதலாக 2 பேரின் பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும். இதனால் வாக்காளர்கள் குழப்பமடையலாம். தவெக வேட்பாளர் வி. செந்தில் குமாருக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பிற செந்தில் குமாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
செந்தில் பாலாஜி பெயரில்...
அதேவேளையில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரிலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி பழனிச்சாமி என்ற நபர் கோவை தெற்கில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கப்படவில்லை. இதனால் அவரால் தொகுதியில் போட்டியிட முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications