கோவை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்... பதுக்கி வைத்த 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை அரைத்து விற்ற புகாரில் 3 பேர் பிடிபட்டனர்.
Recommended Video
மேலும் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேஷன் அரிசியையும் உணவு வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அதிகாரிகள் பிடிபட்ட 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது தாசம்பாளையம். இப் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரேஷன் அரிசி அரைத்து விற்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஹரிபிரகாஷ் உள்ளிட்டோர் தாசம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

ரேஷன் அரிசி மாவாக்கி விற்பனை
இந்நிலையில் செந்தில்குமார் என்பவர் வீட்டிற்குள் மாவு அரவை இயந்திரம் இயக்கப்படும் சப்தம் கேட்டது. பின்னர் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மாவு அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு அங்குள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவை மாவடட்டம் கேரள மாநில எல்லையில் உள்ளதால் இந்த ரேஷன் அரிசி மாவு மூட்டைகள் அந்த மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும் தெரியவந்தது.

ரேஷன் அரிசி மாவுடன் பறிமுதல்
இதையடுத்து சாக்கு மூட்டைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சுமார் 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேவா, நவநீதன், லோகநாதன் ஆகியோரை பிடித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் ஒரு சம்பவம்
இதேபோல் கடந்த ஜூலை மாதம் மேட்டுப்பாளையம் காந்திநகரில் செல்வராஜ் என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து மாவாக அரைத்து விற்பனை செய்வது தெரியந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், குடோனில் இருந்து 27 ரேஷன் அரிசி மூட்டைகளையும் சுமார் 150-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசியின் மாவு மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு செல்வராஜ் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பாளையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதும் அவ்வப்போது வந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications