"இது எங்க ஏரியா.. வெளியே போ!" பாகுபலி யானையை அலறவிட்டு குட்டி நாய்! வியந்து பார்த்த மேட்டுப்பாளையம்
கோவை: சமயபுரம் பகுதியில் காட்டு யானை பாகுபலியை குட்டி நாய் ஒன்று அசராமல் விரட்டி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓடந்துறை, ஊமப்பாளையம், நெல்லித்துறை, சமயபுரம் பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வந்தது.
”சின்னதம்பி” யானை ! காட்டுக்குள்ள, கூண்டுக்குள்ள பார்த்திருக்கீங்க! கும்கியா பார்த்திருக்கீங்களா?
பாகுபலி
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். பாகுபலி என அழைக்கப்பட்ட இந்த காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்டவும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் சார்பில் பாகுபலியினை பிடித்து, ரேடியோ காலர் பொருத்தி அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காகப் பொள்ளாச்சி கோழி கமுத்தி முகாமில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு பாகுபலி யானை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.
வனப்பகுதி
அப்போது வந்த நிலையில் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது. இதனையடுத்து வனத்துறையினர் இத்திட்டம் தோல்வியடைந்தது. கடந்த பல மாதங்களாகவே அடர் வனப்பகுதிக்குள் இருந்து வந்த பாகுபலி யானை தற்போது மீண்டும் ஊருக்குள் தலைகாட்டி வருகிறது. இதனால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவதோடு மனிதர்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
ஒய்யாரமாக நடை போட்ட பாகுபலி
இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள பாகுபலி யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி விட்டு அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. நேற்றிரவு சமயபுரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய பாகுபலி இன்று அதிகாலை அதே பகுதியில் ஒய்யாரமாக நடை போட்டு கம்பீரமாக நடந்து சென்றது.
அலறியடித்து ஓடிய மக்கள்
மேலும், அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இருவரைக் கண்டதும் பிளிறியபடி பயமுறுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் முகாமிட்டுள்ள பாகுபலியை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
பாகுபலியை விரட்டிய குட்டி நாய்
இதையடுத்து மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி யானையை அங்கிருந்த சிறு நாய் ஒன்று குரைத்தபடி விரட்டிச் சென்று தனது எதிர்ப்பை காட்டியதோடு யானையின் வருகையை ஊர் மக்களுக்கு தெரிவிக்கும்படி குரைத்துச் சென்றது. இதனால் கோபமடைந்த யானை நாயை நோக்கிப் பிளிறியபடி அதனை விரட்ட முயன்றது. ஆனாலும் பயப்படாத நாய் கடைசி வரை யானையை துரத்துவதிலேயே குறியாக இருந்தது.
பாகுபலி தொடர் நடமாட்டம்
இந்த சம்பவம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வந்த வனத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் நேற்றிரவு சமயபுரம் வழியாக பவானியாற்று பகுதிக்குச் சென்ற பாகுபலி இன்று அதிகாலை அதே வழியில் மீண்டும் திரும்பி வந்தது. பாகுபலியின் தொடர் நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.