இலவச அரிசி... ரேசன் கடையில் விளக்கம் கொடுத்த அண்ணாமலை... மோடியின் போட்டோவை மாட்டி வைத்தார்
கோவையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேசன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாட்டி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ரேசன் கடையில் பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டி வைத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார்.
பின்னர் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ் துரைசாமி நகர் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் குறித்து பொது மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது ரேசன் கடைக்குள் சென்ற அண்ணாமலைக்கு அக்கட்சியினர் சால்வை அணிவித்தனர்.

ரேசன் கடையில் மோடி போட்டோ
ரேசன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் தொங்கவிட்டு சென்றார். ஏற்கனவே ரேசன் கடையில் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் போட்டோக்கள் இருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் போட்டோவும் வைக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

புது சர்ச்சை
இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்றும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேசன் கடைக்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேசன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை மனதில் கொண்டு, இந்த திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார். நாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 80 கோடி ரேசன் பயனாளிகளில் 77 கோடி பேர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications