இயக்குநர் லீனா மணிமேகலை சர்ச்சை.. காளி ஆட்டத்தை காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட அதிரடி சரஸ்வதி கைது!
கோவை: காளி ஆவணப்படப் போஸ்டர் தொடர்பாக இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த அதிரடி சரஸ்வதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல், மாடத்தி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் 'காளி' எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்கில் வெளியிடப்பட்டது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. காளி தேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வெளியாகிய நிலையில், இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. அதோடு டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கோவை செல்வபுரம் அருகே சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த அதிரடி சரஸ்வதி என்பவர் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்து மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்த அவர், அந்த அமைப்பில் இருந்து விலகி சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றார். திருப்பூரில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் அவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைப்பினை நடத்தி வருகின்றார்.
அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், முகம் சுளிக்கும் வகையிலான கெட்ட வார்த்தைகளை பேசியும், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியும் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமல்லாமல், கோவையில் இருந்து சென்னை வந்து காளிதேவியின் ஆட்டத்தை வெளிப்படுத்தப் போவதாக தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்ற நிலையில், அவருக்கு எதிராக செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அதிரடி சரஸ்வதி மீது தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.