எம்பி தேர்தலோடு எம்எல்ஏ தேர்தல்? நீங்களே மாறலைனா மாற்றப்படுவீர்கள்! கோவையில் கொந்தளித்த அண்ணாமலை!
கோவை : பாஜகவை எப்படி சமாளிப்பது; மக்களை எப்படி திசை திருப்புவது, என திமுகவினர் நினைத்து வருகின்றனர் எனவும், கலவரம் செய்தவர்களை பற்றி பேசாமல் பாஜகவை மதவாத கட்சி என்று கூறுகின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் கடந்த 21 ம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் அவமரியாதையாக பேசியதாக பாஜக கோவை மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் ஏ பி முருகானந்தம், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை,"தமிழக முதலமைச்சர் நடுநிலையான முதலமைச்சராக செயல்படும் வரை பாஜக தொண்டன் கண்ணியமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பார்கள். நாங்கள் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.

பாஜக தொண்டர்கள்
முதலமைச்சரின் வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பெயருக்கு முதல்வராக இருந்தாலும் எங்களை தாண்டி கோட்டைக்கு செல்ல முடியாது. அடுத்து நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை முதல்வர் முடிவெடுப்பார். இந்த அட்டகாசங்களை கொஞ்ச காலம் பொருத்து கொள்ளுங்கள். அவர்களுக்கு நடந்த அநியாயம் என்பது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் நடந்த அநியாயம்

ஆ.ராசா
நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் சிலர் தமிழகம் கலவர பூமியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். முதலமைச்சராக வருவதற்கு பத்து ஆண்டுகளாக காத்திருந்தார். பதவியேற்ற முதல் நாளில் வீர வசனம் பேசினார். அனைவருக்குமான முதல்வராக இருப்பேன் என் பேசிவிட்டு கலவரக்காரர்கள் பற்றி பேசாமல் பாஜகவை மதவாதியாக குறிப்பிடுகிறார். திமுகவின் குதிங்காலாக தொடர்ந்து ஆபாச பேச்சு பேசும் ஆ.ராசா ஊழல் செய்தவர். தொடர்ச்சியாக ஊழல் செய்யவில்லை என பேசி வருகிறார்.

யோசிக்கும் திமுக
தீப்பொறி ஆறுமுகம் மற்றும் வெற்றி கொண்டான் ஆகியோர் இது போன்று பேசியுள்ளனர். ஆரம்பத்தில் பேசுனீர்கள் பத்திரிக்கையில் எழுதினால் மிரட்டி வெளியிட விடாமல் செய்வீர்கள். இன்று அரசியல் களம் மாறியுள்ளது. இன்று ஒரு வார்த்தை பேசினாலும் உன்னிப்பாக. கவனிக்கும் காலமாக உள்ளது. இதை எப்படி சமாளிப்பது அடுத்த பிரச்சினையை எப்படி கிளப்பலாம் என அறிவாலயத்தில் ரூம் போட்டு பேசி வருகிறார்கள். இது தான் 18 மாத காலமாக நடைபெற்று வருகிறது

11 ஆண்டுகள்
கோவையில் ஒரு பக்கம் பயங்கரவாதிகளின் செயல்கள், மறுபக்கம் ஆ.ராசாவின் பேச்சு, மற்றொரு பக்கம் காவல்துறை ஏவல்துறையாக தடியடி நடத்தி வருகின்றனர். ஆ.ராசாவிடம் நீங்கல் பேசும் அனைத்து வாசகங்களையும் பேசி பெரியாரின் புத்தகத்தை காட்டுகிறார். முதலமைச்சர் சிஆர்பிசி படித்துள்ளாரா என தெரியவில்லை. ஆனால் நான் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். மத்திய அரசுக்கு எந்த பவரும் இல்லை என நினைக்க வேண்டாம். கேரள பேப்பரில் எழுதியுள்ளதை படிக்க வேண்டும். கேரளாவில் நடந்தது போல் இங்கும் நடக்கும். முதல்வர் இதனை முழுமையாக உணர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications