திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனை.. வசமாக சிக்கிய பாஜக இளைஞரணி நிர்வாகி! கோவையில் பரபரப்பு
கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக பாஜக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை குறித்து ரகசிய தகவலின் பேரில் ரெய்டு மேற்கொண்ட போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லாட்டரி
தமிழ்நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டு விற்பனை மூலமாக அரசுக்கும், லாட்டரி சீட்டு கம்பெனி உரிமையாளருக்கும் கணிசமான அளவு வருவாய் வந்துகொண்டிருந்தது. ஆனால் ஒருபுறம் இதற்கு எதிரான பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. ஏனெனில் ஒருநாள் இல்லை என்றாலும் ஏதாவது ஒருநாள் நாமும் பணக்காரராகி விடுவோம் என்று சாமானிய மக்கள் முதலில் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க தொடங்கினர். ஆனால் இது நாளடைவில் ஆக்டோபஸ் போல தனது கரங்களை விரித்தது. அதாவது, சாமானிய மக்கள் தங்களின் வருவாயில் கணிசமான அளவை இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு செலவிட்டனர்.

தடை தடை
இதனால் குடும்பங்களில் குழப்பமும் சண்டையும் அதிகரித்தது. இந்நிலையில், ஆக இப்படியாக லாட்டரி சீட்டுக்கு எதிராக ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து 2003ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதனை தடை செய்தார். இதனால் அரசுக்கு கணிசமான வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதால் அது டாஸ்மாக் மூலம் ஈடு செய்யப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை லாட்டரி விற்பனை என்பது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படுகிறது. ஆனால் அவ்வப்போது சிலர் கேரளாவிலிருந்து லாட்டரிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருவார்கள். காவல்துறையும் கைது நடவடிக்கையில் ஈடுபடும். ஆனால் முழுமையாக இதனை தடுக்க முடியவில்லை.

பாஜக இளைஞரணி நிர்வாகி
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் கேரள லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காட்டூர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர், சாய்பாபா காலணியை சேர்ந்த சபரி என்பது தெரியவந்தது. மேலும், இவர் பாஜகவின் கோவை மாவட்டத்தின் இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

வெளிமாநில லாட்டரி
அவரிடம் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோதனை மேற்கொள்கையில் ரூ.6.500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மைக்கு இலக்கணம் பாஜகதான் என கட்சித் தலைவர்கள் கூறிவரும் நிலையில் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி ஒருவரே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications