கோட்டைக்குள் நுழையும் அண்ணாமலை? அடடே..பொள்ளாச்சி குலுங்க குலுங்க பிரமாண்ட செட்.. உற்சாகத்தில் பாஜக!
கோவை : பொள்ளாச்சி சாலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் மாநாட்டிற்கு, சட்டசபை வளாகம் மாதிரியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் பிரிவில் நாளை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டுக்காக சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதில்,'பொள்ளாட்சியில் தாமரை ஆட்சி' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக
பா.ஜ.க தமிழகத்தில் வலுவாகக் காலூன்றும் முயற்சிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்காக கட்சியில் புது ரத்தம் பாய்ச்சி வருகின்றனர். அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது. தி.மு.க அரசை எதிர்ப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு டஃப் கொடுத்து வருகிறார் அண்ணாமலை. தி.மு.க அரசு மீது அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது ஆளுங்கட்சியினருக்கும் குடைச்சலாகவே மாறியுள்ளது.

அண்ணாமலை
தான் மாநிலத் தலைவராக இருக்கும் காலத்தில் பாஜகவில் நல்ல வளர்ச்சியை தலைமைக்கு காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மற்ற கட்சிகளில் செல்வாக்கு பெற்ற தலைவர்களையும், முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரையும், முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளையும் கட்சியில் இணைத்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளையும் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார். அவர்களின் செல்வாக்கை கட்சிக்குத் திருப்பும் வேலைகளிலும் ஈடுபடுத்தி வருகிறார் அண்ணாமலை.

அடுத்த குறி
2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் தமிழக பாஜகவின் இப்போதைய குறி. அதில் பாதிக்கு மேல் சீட்களை பெறவேண்டும் என அக்கட்சியினர் உழைத்து வருகின்றனர். அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தலை குறி வைத்தும் நீண்டகால நோக்கில் பல்வேறு வியூகங்களை அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியிருக்கும் செய்தியாம்.

மாவட்டந்தோறும் கூட்டங்கள்
இதை குறிக்கோளாக வைத்து தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவில் கூட்டங்களை நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில் தான், ஒவ்வொரு ஏரியாவாக சென்று பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார் அண்ணாமலை. சமீபகாலமாக, பாஜக கூட்டங்களுக்கு அதிக மக்கள் கூட்டம் வருவதாக டெல்லிக்கும் குட் நியூஸ் பறந்துள்ளது. இதைக் கேட்டு தலைமையும் கீப் இட் அப் சொல்லியுள்ளதாம்.

கோவை மாநாடு
அடுத்தகட்டமாக பெரிய அளவில் மாநாடுகளையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அந்த வகையில் நாளை (ஜூன் 19) கோவை தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக பாஜகவினர் செய்து வருகின்றனர். பாஜக சார்பில் 'தாமரை ஆட்சி' என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்ற இருக்கிறார்.

சட்டசபை போல செட்
இதனையொட்டி கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் பிரிவில் பி.கே.டி பள்ளி எதிரில் மிகப்பெரிய மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்காக பிரமாண்டமான சட்டசபை வளாகம் போல் செட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த திட்டமா?
மத்தியில் ஆளும் பா.ஜ.க அடுத்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டையும் ஆளும் என பா.ஜ.க தலைவர்கள் கூட்டங்களில் பேசி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவரை வரவேற்கும் பேனர்களில் 'வருங்கால முதல்வரே' என்றெல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு 'கோட்டை' செட் பிரமாண்ட மேடை ஏற்பாடு அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications