ஆப் மூலம் கடனா? வேண்டவே வேண்டாம்.. புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டல்.. 4 பேர் அதிரடி கைது
கோவை : லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவரின் புகைப்படம் மற்றும் தகவல்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியதோடு, போனில் அழைத்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த இரு பெண்கள் உட்பட நால்வரை கோவை மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்பெல்லாம் லோன் வாங்க வங்கிகளுக்கு லோ- லோவென அலைய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் தேவையில்லை.
இதற்கென ஏராளமான ஆப்ஸ் ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மொபைலில் டவுன்லோடு செய்து சில தகவல்களை அளித்தால். உடனடியாக கடன் கிடைக்கும், கூடவே தொல்லைகளும்...

லோன் ஆப் மூலம் கடன்
இந்நிலையில் லோன் ஆப் மூலம் கடன் கொடுத்து அத்துமீறிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் வீரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுவாதி என்பவர் பல்வேறு மொபைல் ஆன்லைன் ஆப்கள் மூலம் சுமார் 1 லட்சத்து ஆயிரம் ரூபாய் கடன் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதில் 57 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கி கணக்கிற்கு வந்த நிலையில், அதில் வட்டியுடன் சேர்த்து 74 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். இருப்பினும், மீத தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் தாமதமாக செலுத்தும் பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும் எனக்கூறி, ஸ்மார்ட் ஆப் லோன் என்ற நிறுவனத்தை சேர்ந்த பெண்கள் உட்பட நால்வர் போனில் அழைத்து மிரட்டியுள்ளனர்.

போன் மூலம் மிரட்டல்
பணம் செலுத்த தாமதமான நிலையில், சுவாதியின் மொபைல் போனில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் எண்களுக்கு, சுவாதி பணம் செலுத்தாதவர் என்றும், மோசடி பேர்வழி என்றும், வாட்ஸ் ஆப் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் செய்தி அனுப்பியதோடு, வாட்ஸ் ஆப்பில் அவரது புகைப்படங்களையும் ஸ்மார்ட் ஆப் லோன் நிறுவனத்தினர் பகிர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி, இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் புகாரளித்தார்.

அதிரடி கைது
அத்துடன் தனக்கு அழைக்கும் நபர்களின் செல்போன் எண்களையும் அவர் போலீசில் வழங்கினார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த எண்கள் பெங்களூருவில் வசித்து வரும் அஷ்ரியா அப்ரீன்(24), ரகுமான் ஷெரீப் (24), யாசீன் பாஷா(27), பர்வீன்(31) ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்ததால், அங்கு சென்று அவர்களை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையடுத்து நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்களை கோவை மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறப்பு பிரிவிலும், ஆண்களை பொள்ளாச்சி கிளைச்சிறையிலும் அடைத்தனர்.

தீவிர விசாரணை
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நால்வரும் சன்னி என்பவர் நடத்தி வரும் ஸ்மார்ட் லோன் ஆப் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், வீட்டிலிருந்தே மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றி வந்த அவர்கள், ஆப் மூலம் கடன் பெற்றுள்ளோரை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் நிறுவனத்தின் உரிமையாளரான சன்னி, இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே ஊழியர்களை தொடர்பு கொண்டுள்ளதும், தனது முகத்தை ஊழியர்களுக்கு காட்டாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே சன்னி வெளிநாட்டிலிருந்து இந்நிறுவனத்தை நடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள போலீசார், அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications