கோவை : தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
கோவையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் பெயர் ஸ்வேதா என்பதாகும். இவர் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவர்.
கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் உள்ள வாரி மெடிக்கல் அகாடமி என்ற நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

நீட் பயிற்சி மையம்
நீட் பயிற்சி மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவரும் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்வேதா விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் திருச்சியை சேர்ந்த பிரியங்கா,கரூரை சேர்ந்த காவ்யா ஆகியோர் ஒரே அறையில் தங்கி படித்து வருகின்றனர்.

மாணவனுடன் காதல்
இப்பயிற்சி மையத்தில் மதுரையை சேர்ந்த யோகேஸ்வரன்,18 என்பவரும் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரன் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர்கள் பழகி வருவது தெரிந்து ஸ்வேதா மற்றும் யோகேஸ்வரன் இருவரையும் பெற்றோர்கள் பேசக்கூடாது என கண்டித்துள்ளனர்.
அதன் பின்பு யோகேஸ்வரனை கடந்த ஜனவரி மாதத்தில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க வேண்டாம் என அவரது பெற்றோர் நிறுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

ஸ்வேதா பாதிப்பு
நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமலும்,பயிற்சி வகுப்புக்கு செல்லாமலும் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். நேற்று மாலை பிரியங்கா, காவ்யா ஆகிய இருவரும் நீட் வகுப்பிற்கு சென்றுள்ளனர்.பின்பு, வகுப்பு முடிந்து பிரியங்கா ஸ்வேதாவிற்கு மெஸ்ஸில் இருந்து உணவு வாங்கி வந்து பார்த்த போது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தூக்குப் போட்டு தற்கொலை
சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்த பொழுது ஸ்வேதா மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வார்டனுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் கதவை உடைத்து, ஸ்வேதாவை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்வேதா மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மனம் உடைந்த ஸ்வேதா
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விரைந்து அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதை கண்டித்ததால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

வழக்குப்பதிவு
இதையடுத்து ஸ்வேதாவின் உடலை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications