உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர்... தமிழகம் திரும்ப சம்மதம் - பெற்றோர் மகிழ்ச்சி
உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ள கோவை மாணவர் சாய்நிகேஷ் இந்தியாவிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
கோவை: உக்ரைன் துணை ராணுவத்தில் பணியாற்றும் தங்களின் மகன் இந்தியாவிற்கு திரும்ப சம்மதம் தெரிவித்திருப்பதாக இளைஞரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களது மூத்த மகன் சாய்நிகேஷ். இவர் இந்திய ராணுவத்தில் சேர எடுத்த முயற்சி உயரம் காரணமாக தோல்வியடைந்தது. இதனால் உக்ரைனில் விமானவியல் படித்து வந்தார்.
கடந்த மாதம் 24ஆம் தேதியன்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போரினால் பல லட்சம் பேர் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் படிக்கப் போன இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ் திரும்பி வரவில்லை. இதனால் பெற்றோர் கவலையடைந்தனர்.
சாய்நிகேஷை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு ஊருக்கு அழைத்த போது, அவர் வர மறுப்பு தெரிவித்தார்.
மேலும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தனக்கு நிறைவேறி விட்டதாகவும், உக்ரைன் துணை ராணுவத்தில் நான் தற்போது சேர்ந்து பணியாற்றி வருகிறேன் என்றும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
எப்படியாவது தங்களின் மகனை சமாதானம் செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என சாய்நிகேஷின் பெற்றோர் முடிவு செய்தனர். தொடர்ந்து தங்களின் மகனுடன் பேசிவந்தனர்.
உக்ரைனில் போர் மூண்டிருக்கும் சூழ்நிலையில் நீ அங்கு இருப்பது சரியானது அல்ல. உடனடியாக நாட்டிற்கு திரும்பி வா என அழைத்துள்ளனர். பெற்றோர்களின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்தது. கோவை திரும்புவதற்கு சாய்நிகேசும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்நிகேஷின் பெற்றோர், எங்கள் மகன், சாய்நிகேஷை தொடர்புகொண்டு பேசினோம். அங்கு இருக்கக்கூடிய சூழல் குறித்தும் எடுத்து கூறி, நாடு திரும்புமாறு கேட்டு கொண்டோம். அவரும் எங்கள் விருப்பத்தை ஏற்று இந்தியாவிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினர்.
நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் மகன் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தெரிவித்தோம். அவர்களும் எங்களைப் பொறுமையுடன் இருக்குமாறும், உங்கள் மகனை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர்.












Click it and Unblock the Notifications