கோவையில் ஒரே கல்லூரியில் 46 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு..கேரள மாணவர்களால் வந்த வினை
கோவை: கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாணவர்களால் கொரோனா பரவி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள எல்லையை ஒட்டி உள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், கன்னியாகுமரியும், கோவையும் மட்டுமே சமவெளி பகுதியை எல்லைகளாக கொண்டவை ஆகும். இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களில் ஏராளமான வழிகளில் கேரளாவிற்கு செல்வதற்கு வழி உள்ளன. இதனால் சோதனை செய்வதும் அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. இதன் காரணமாக கேராளவில் இருந்து தமிழகம் வருபவர்களால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோவை மாவட்டம் கேரள எல்லையை அதிகம் பகிர்வதால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அங்கு குறையவே இல்லை. குறிப்பாக கோவை நகரமே கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள்,. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கொரோனா பாதிப்பை அதிகம் சந்தித்து வருகிறது.

ஹாஸ்டல்
கோவை சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில், அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நேற்று மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கல்லூரி வளாகம்
அப்போது கேரள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே செயல்படும் கொரோனா முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பேருக்கு தொற்று
தொடர்ந்து, கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.பள்ளிகளை பொறுத்தவரையில் சோமனூர் மற்றும் இருகூர் அரசு பள்ளிகளில் பயிலும் தலா ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

மாணவர்கள் கவலை
கோவையில் தொற்றின் தாக்கம் அதிகரித்திருந்த சூழலில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த சூழலில், தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி நிர்வாகம்
இதனிடையே வெளி மாநிலங்களில் இருந்து கல்லூரிகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே எல்லையில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications