கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. குறைகிறது கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பலியும் இல்லை
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டம் தொற்றிலும், உயிர் பலியிலும் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது.
கோவை மட்டுமில்லாமல் அதன் அண்டை மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்கள், தனி பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிலை உருவானது. அவற்றுக்கு ஊரடங்கு தளர்வில் குறைவான தளர்வுகள் வழங்கியது அரசு.

அரசு நடவடிக்கை
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கைகள் படிப்படியாக குறைய தொடங்கியது.

4 மாதங்களுக்கு பிறகு பலியில்லை
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் பலி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் 4ம் தேதி யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தொடர்ந்து மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது. 4 மாதங்களுக்கு பின் நேற்று உயிரிழப்பு ஏற்படாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை நிலவரம்
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 334 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 392 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

குணமடைந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,107 ஆக உள்ளது. அந்த மாவட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக 3,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications