துவங்கும் என்ஐஏ விசாரணை.. கோவை கார் வெடிப்பில் கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல்.. கோர்ட் உத்தரவு
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் 3 நாள் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் 5 பேரையும் நவம்பர் 8 ம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. என்ஐஏ விசாரணையை துவங்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23ம் தேதி அதிகாலையில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் கோவிலின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் காருக்குள் இருந்த நபர் இறந்தார்.
இது முதலில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த விபத்தாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இருப்பினும் இதில் சில மர்மங்கள் இருந்தன.

தீவிர விசாரணை
இதையடுத்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. இந்த விசாரணையின்போது காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரிலேயே இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. மேலும் 2019ல் அவரிடம் என்ஐஏ விசாரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வெளியான வீடியோ- 5 பேர் கைது
இதற்கிடையே தான் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு ஜமேஷா முபின் உள்பட சிலர் 5 பேர் காரில் பொருட்களை ஏற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதனால் தான் சதிச்செயல் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

முடிந்த காவல்-சிறையில் அடைக்க உத்தரவு
இதற்கிடையே தான் கைதான 5 பேரையும் கோவை குற்றவியல் நீதிமன்றம் மூலம் போலீசார் 3 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 5 பேரின் 3 நாள் போலீஸ் காவல் இன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் இன்று மாலை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் நவம்பர் மாதம் 8 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

என்ஐஏ விசாரணை துவக்கம்
இதற்கிடையே தான் கோவை கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் இறந்ததன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதன்படி தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ஐஏ விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ஐஏ விசாரணையை துவங்கும்போது 5 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவார்கள்.












Click it and Unblock the Notifications