சுபஸ்ரீ கொலை? கணவருக்கு மாலை.. ஜக்கியை போலீஸ் விசாரிக்கனும்! மோடி ஈஷா வந்துள்ளார் - முத்தரசன் பகீர்
கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து இருக்கிறார். ஜக்கி வாசுதேவை அழைத்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் உள்ள தங்கள் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈஷா மீது பல்வேறு புகார்கள் வருகின்றன.
தற்கொலை, நில ஆக்கிரமிப்பு, வனவிலங்கு வேட்டை என பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. கடந்த டிசம்பர் 11 முதல் 18 வரை சைலண்ட் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுபஸ்ரீ ஈசாவில் பயிற்சிக்காக வருகிறார்.
ஜக்கிக்கு தலைவலி! “பூதாகரம்” எடுத்த சுபஸ்ரீ மரணம்! ஈஷா மைய மர்மங்களை விசாரிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சாமியார் ஆறுதல்
நிகழ்வு முடிந்து மனைவியை அழைத்து செல்ல கணவர் வரும்போது அந்த பெண் வரவில்லை. இது தொடர்பாக கணவர் 18 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். 1 ஆம் தேதி அழுகிய நிலையில் சுபஸ்ரீ கண்டெடுக்கப்பட்டார். அவசர அவசரமாக பிரேத பரிசோதனை அன்றே செய்யப்பட்டது. 18 ஆம் தேதிக்கும் 1 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் டிசம்பர் 24 ல் சாமியார் உரையாடி கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜக்கி - பிரதமர் நெருக்கம்
சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டு இருக்கலாம். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செல்வாக்கு மிக்கவர். பிரதமரே இங்கு வருகிறார். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் ஈஷாவிற்கு வந்தார். ஒன்றிய அரசின் செல்வாக்கு பெற்ற நிறுவனமாக ஈஷா உள்ளது. சுபஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி செல்வாக்குடன் இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம், காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது.
ஆர்ப்பாட்டம்
மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து, முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் படுகொலைகளை நிறுத்த முடியும். வரும் 6 ம் தேதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். பலரின் பினாமியாக ஈசா செயல்படுகிறது. ஈசா விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.
நடவடிக்கை வேண்டும்
ஈசா விவகாரத்தில் தமிழக காவல்துறை மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும். பெண்கள் மீது விரும்பத்தகாத வேலையில் யார் ஈடுபட்டாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் கம்பெனி வசூல் தவறு. யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஜக்கி வாசுதேவிடம் விசாரிக்க வேண்டும்
ஈசாவில் கணவரை அழைத்து பேசி ஜக்கி உத்திராட்ச மாலை போட்டுள்ளார். ஒன்றாம் தேதி கோவை அரசு மருத்துவமனை ஏன் அவ்வளவு அவசரமாக போஸ்ட் மாடம் செய்தது. செல்வாக்கு பெற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஜக்கி வாசுதேவிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார்.