மளிகைக் கடையில் பணப்பட்டுவாடா: தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்துங்க.. தி.மு.க கோரிக்கை!
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணப்பட்டுவாடா புகார்கள்
தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடப்பதால் இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் அரசியல் கட்சியினர். பணப்பட்டுவாடா தொடர்பாக தி.மு.க, அ.தி.மு.க என்று இரு கட்சிகளும் புகாரில் சிக்கி வருகின்றன.
சர்ச்சையான தொண்டாமுத்தூர்
தமிழகத்தின் நடசத்திர அந்தஸ்து மிக்க தொகுதியாக விளங்கி வருவது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி. இங்கு அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி;வேலுமணி 3-வது முறையாக வெற்றியை நோக்கி களமிறங்கி உள்ளார். தி.மு.க சார்பில் காத்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க பணப்பட்டுவாடா செய்வதாகவும், அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் தி.மு.க வலியுறுத்தி உள்ளது.
மளிகைக்கடையில் பணப்பட்டுவாடா
தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வைத்து நேற்று இரவு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தி.மு.க அளித்த புகாரின்பேரில் போலீசார், தேர்தல் பறக்கும் படையினரும் அங்கு விரைந்து சென்றனர். கோவை ஆணையர் டேவிட் ஆசிர்வாதமும் அங்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் இருந்து பல ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வினர் குற்றச்சாட்டு
தகவல் அறிந்து தி.மு.க.வினர் அங்கு சென்றபோது அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.குனியமுத்தூர் காவல் நிலையம், அமைச்சர் எஸ்.பி்.வேலுமணியின் இல்லம் போல செயல்படுவதாகவும், அந்த காவல் நிலைய செயல்பாடுகள் அ.தி.மு.கவிற்கு சாதகமாகவே இருப்பதாகவும் தி.மு.கவினர் குற்றம்சாட்டினர். பணப் பட்டுவாடா செய்யப்பட்ட இருந்த இடத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் கைபற்றபட்டதாக கூறப்பட்ட நிலையில் 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் பறிமுதல் என காவல் துறையினர் சொல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அ.தி.மு.க.வினர் 6 பேர் கைது
இதற்கிடையே குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் தொகுதிக்கு உட்பட ஆர்.எஸ். புரம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தும்படி தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.