பிரச்சினை ஓபிஎஸ்ஸே இல்லை! எடப்பாடி கோட்டையில் வேட்டு வைக்கும் ‘மின்சார கண்ணா’! கலங்கிப் போன இபிஎஸ்!
கோவை : கொங்கு மண்டலம் தனது கோட்டை என அதிமுக இடைக்கால பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கும் நிலையில் அதனை சரிக்க ஓபிஎஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே நேரத்தில் திமுக தரப்பில் அமைச்சர் ஒருவர் எடுத்த அஸ்திரங்களால் பல நிர்வாகிகள் கட்சி தாவ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போதும் தலைவலி தான். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் என அடுத்தடுத்து ஏதாவது ஒரு சிக்கல் எழுந்து வருகிறது.
மேலும் அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு, தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.ஜயபாஸ்கர் சிக்கி உள்ளது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்க கவச விவகாரத்தில் ஓபிஎஸ் நெருக்கடி என ஏதாவது ஒரு விவகாரம் அடுத்தடுத்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. அதை தகர்க்க ஓபிஎஸ் வகுத்த திட்டங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு சில முன்னாள் நிர்வாகிகள் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் தஞ்சம் புகுந்த நிலையில் கொங்கு மண்டலம் எனது கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி தெம்பில் இருக்கிறார். ஆனால் தற்போது புது சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது.

எடப்பாடி ஆதரவு
கொங்கு மண்டலத்தில் இருக்கும் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் சிலரை திமுகவுக்கு கொண்டு வரும் முக்கிய அசைன்மென்ட்டை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பெற்றிருப்பவரும் மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி. தனது சொந்த ஊரான கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை தோற்கடித்து உள்ளாட்சித் தேர்தலிலும் பல ஒன்றியங்கள் மாநகராட்சியை கைப்பற்றினார்.

செந்தில் பாலாஜி
இந்நிலையில் தற்போது மீதம் இருக்கும் மூன்று ஒன்றியங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக எஸ்பி வேலுமணி ஆதிக்கம் செலுத்தி வரும் கோவையில் அதிமுக படுதோல்வியை சந்திக்க வைத்த நிலையில் முன்னால் எம்எல்ஏ ஆறுகுட்டியையும் திமுகவுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் திமுகவுக்கு தீபாவளி பரிசாக எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சிலரை திமுகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.

பேச்சுவார்த்தைகள் தீவிரம்
இதற்கான பேச்சு வார்த்தைகள் திரை மறைவில் தொடங்கிய நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் பொதுவெளியிலேயே பேசு பொருளாகி இருக்கிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சென்றிருக்கும் நிலையில் அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களை உஷார் படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் கட்சி தாவும் நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர் கோவை திமுகவினர்.












Click it and Unblock the Notifications