ஆ.ராசா வந்தால் ஆர்ப்பாட்டம்.. கறுப்புக் கொடியுடன் தயாரான பாஜக.. திடீரென பயணம் ஒத்திவைப்பு!
கோவை: திமுக விழாக்களில் பங்கேற்பதற்காக நீலகிரி வரவிருந்த ஆ.ராசாவுக்கு பாஜக சார்பாக கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜக, அதிமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தரப்பில் போராட்டங்களும் நடைபெற்றன. இதுமட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் பாஜக சார்பாக ஆ.ராசா மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

நீலகிரியில் திமுக விழா
இதனிடையே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் திமுக.வின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் துணைப் பொதுசெயலாளரும், நீலகிரி எம்பி-யுமான ஆ.ராசாவும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட திமுக சார்பில் கூறப்பட்டிருந்தது.

பாஜக மகளிர் அணி மனு
இதனிடையே திமுக எம்பி ஆ.ராசா நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ரோடு வழியாக நீலகிரி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதையறிந்த பாஜக மகளிர் அணியினர் கறுப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு அனுமதி கேட்டு, அணியின் மாவட்ட பொது செயலாளர் பிரீத்தி லட்சுமி தலைமையில் நேற்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்கவில்லை
இதுகுறித்து பாஜக மகளிர் அணி தரப்பில் கூறுகையில், பெண்களை இழிவுப்படுத்தி பேசிய ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பொது மன்னிப்பு கூட கேட்காமல் இருக்கும் ஆ.ராசா, கோவை வந்தால் கண்டன போராட்டம் நடத்துவோம். கோவில், கோவிலாக சுற்றி வரும் முதலமைச்சரின் மனைவி மற்றும் மகளுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம். அவர்களும் பெண்கள் தான். இந்து மதத்தை பின்பற்றி வரும் அவர்களுக்கும் ராஜா பேசியது பொருந்தும் என்று தெரிவித்தனர்.

ஆ.ராசா பயணம் ஒத்திவைப்பு
ஆனால் கோவை வழியாக நீலகிரி செல்ல திட்டமிட்டிருந்த ஆ.ராசா, தவிர்க்க முடியாத காரணத்தால் பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக மகளிர் அணி தரப்பில், ஆ.ராசா எப்போது கோவை வந்தாலும் கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications