50% டார்கெட்.. ஒவ்வொரு பூத்திலும் திமுகவின் இலக்கு.. கோவையில் செந்தில் பாலாஜி போட்ட பலே பிளான்!
கரூர்: கோவையின் ஒவ்வொரு பூத்திலும் 50 சதவிகித வாக்குகளை இலக்காக வைத்து பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கிய திமுக, பல்வேறு புதிய வியூகங்களை களத்தில் செயல்படுத்த தொடங்கி இருக்கிறது.
மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை முழுமையாக நம்பி இருக்கிறது திமுக தலைமை. கடந்த சட்டசபைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், இம்முறை மற்ற பகுதிகளில் அடையும் தோல்விகளை மேற்கு மண்டலத்தில் அடையும் வெற்றியை வைத்து சமம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

அதற்காகவே கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளுக்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல், சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று திமுக தரப்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற புதிய வகையில் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு பூத்திலும் 40 சதவிகித வாக்குகளை கட்டாயம் திமுக கைப்பற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 50 சதவிகித வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு இலக்கை அதிகரித்துள்ளார்.
கோவையில் இளைஞரணி மற்றும் மகளிரணி இணைந்து இந்த பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் SIR பணிகள் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளி வந்ததும், ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் மூலம் திமுக எடுத்த பட்டியலோடு ஒப்பிட்டு திமுக ஆதரவு வாக்குகளை விடுபட்டிருந்தால் சேர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் கோவையின் ஒவ்வொரு வீடுகளுக்கும் தேர்தலுக்கு முன் 4 முறையாவது பூத் கமிட்டி நிர்வாகிகளும், திமுகவினரும் சென்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்காக கரூர் கம்பெனி ஆட்களும் களமிறங்கி இருக்கிறார்கள். இதன் மூலமாக திமுகவுக்கு எதிராக இருக்கும் வாக்குச்சாவடிகளை தேர்தலுக்கு முன்பே சரி செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.
திமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று கோவை இப்போதே தேர்தல் களத்தை செந்தில் பாலாஜி சூடாக்கி இருக்கிறார். இதனால் திமுக முழுமையாக தேர்தலுக்கு தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு ஈடுகொடுக்க அதிமுகவும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications