கோவை விளையாட்டு மைதானத்தில் குவிந்து கிடந்த வலி நிவாரணி ஊசிகள்
கோவை : கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிப்பறைகளில் ஏராளமான வலி நிவாரணி ஊசிகள் கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சில விளையாட்டு போட்டிகள் அரங்கத்தில் நடைபெற்றிருக்கும் நிலையில் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கழிப்பறையில் கிடக்கும் வலி நிவாரணி ஊசிகள் ஊக்கமருந்தாக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை முதல் சென்னை வரை.. அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்! பொசுக்கப்பட்ட பள்ளி மாணவிகள்! தீர்வு என்ன
கோவை நேரு விளையாட்டரங்கம்
கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி பூங்கா அருகே அமைந்துள்ளது. நேரு விளையாட்டு அரங்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், தடகளப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 1970 மற்றும் 1990ம் ஆண்டுகளில் சந்தோஷ் டிராஃபி போடிகள் இங்கு நடைபெற்றதால் மிகவும் பிரபலமான அரங்கமாக உள்ளது. இந்த மைதானத்தில் பகலிரவு போட்டிகள் நடத்தும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் 400 மீ தடகளப் பாதையும் அமைந்துள்ளது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறைகள், மாநாடு மண்டபம், வீரர்கள் மைதானத்திற்கு செல்வதற்கு பிரத்யேக பாதை என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டுகளை பார்வையிடும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மாநில அளவிலான தடகளப்போட்டிகள் இந்த அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கழிவறையில் வலிநிவாரணி ஊசிகள்
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த நேரு விளையாட்டரங்கம் சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் திறந்து வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த அரங்கில் தடகள மற்றும் மற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அரங்கில் உள்ள ஆண்கள் கழிவறையில் பயன்படுத்தபட்ட வலிநிவாரண மருந்தின் குப்பிகள் மற்றும் ஊசிகள் ஏராளமாக கிடந்துள்ளது. இதை பார்த்த விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை இந்த வலி நிவாரணிகள் ஊக்க மருந்துக்காக விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தினார்களா, ஊக்கமருந்தை பயன்படுத்தி விளையாட்டில் வெற்றி பெற்றனரா என்ற சந்தேகம் மற்ற வீரர்களுக்கு எழுந்துள்ளது.
விளையாட்டில் பங்கேற்றவர் பயன்படுத்தியதா?
இதற்கு முக்கியக் காரணம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள ஊசிகளில் மருந்தின் ஈரம் கூட காயவில்லை. எனவே சமீபத்தில்தான் அவைகள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற வலி நிவாரணி, போதை ஊசிகள் மருத்துவமனைகளில் வலி தாங்காமல் அவதிப்படும் நோயாளிகளுக்கும், அறுவை சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கும் தரப்படுவது வழக்கம். அப்படி இருக்க இந்த மருந்துகள் யார் மூலமாக எப்படி விளையாட்டு மைதானத்திற்கு வந்தது, யார் பயன்படுத்தினார்கள் என்ற சந்தேகங்கள் வலுவடைந்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் வேண்டுகோள்
ஒரு வேளை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தவில்லை என்றால் சமூக விரோதிகள் யாரேனும் மைதானத்தில் பயன்படுத்திவிட்டு கழிவறையில் போட்டுச் சென்றனரா என காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கோவையில் கொரோனோ தாக்கத்திற்கு பிறகு வலி நிவாரண மருந்துகளை போதை மருந்துகளாக பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு அரங்கில் வலிநிவாரண ஊசிகள் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.