எம்பி தேர்தலில் வெல்வது இருக்கட்டும்.. பாஜக உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு.. செந்தில் பாலாஜி அட்டாக்!
கோவை: ரஃபேல் வாட்ச் விவகாரம் மூலம் தமிழக அமைச்சர்களின் ஊழலை வெளியே கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெற வைப்போம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு, தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு, நகராட்சி தேர்தலில் எத்தனை சேர்மனை பாஜக வென்றது என்பதை கூறுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் செந்தில் பாலாஜி எழுப்பி வரும் கேள்விகளுக்கு, இதுவரை அண்ணாமலை சரியான பதிலை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இதனிடையே கோவைக்கு வந்த அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஃபேல் வாட்ச் மூலமாக 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று பேசி இருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட காது கேளாதவர்களுக்கான தொழில்நுட்ப கருவியின் விலையை பல மடங்கு உயர்த்தி கூறியது சர்ச்சையை கிளப்பியது.

செந்தில் பாலாஜி பேட்டி
இந்த நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார். ஒன்றரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளார். இன்னும் வரக்கூடிய ஆண்டுகளில் கோவை மண்ணிற்கு கூடுதலாக திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறார்.

விமான நிலையம் விரிவாக்கம்
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,084 கோடி செலவிடப்பட்டு நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது . இன்னும் இரண்டு ஒரு மாதங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு விமான பணிகள் தொடங்க உள்ளது. மேம்பால பணிகள், சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதற்கான நிதிகளை முதலமைச்சர் வழங்குகிறார். கோவை மாநகராட்சியில் 114 கிலோ மீட்டர் மண் சாலைகள் உள்ளது. அதிமுக ஆட்சியில் தார் சாலைகளாக மாற்றி இருக்கலாம் .ஆனால் அவர்கள் செய்யவில்லை.

கோவை சாலைகள்
ஒரு சாலைக்கு ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம். கோவை மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான சாலை பணிகளும் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை. தற்போது புதிய சாலைகளை அமைப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. ரூ.211 கோடி அளவில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, கூடுதலாக ரூ.19 கோடி சிறப்பு நிதியை முதல்வர் விடுவித்துள்ளார். மீதமுள்ள நிதி மார்ச் மாதத்தில் ரூ. 200 கோடியும் விடுவிக்கப்பட்டு விடுபட்ட சாலைகள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாஜக உறுப்பினர்கள் எவ்வளவு பேர்?
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது. எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பதே தெரியாத கட்சி பாஜக. ரூ. 345 மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு ரூ.10,000 என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர். 37 வயதில் 20,000 புத்தகங்கள் படித்துள்ளார் என பொய் சொல்கின்றனர். பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது சாமானிய மக்களின் நிலைமை என்ன. அது குறித்த கருத்தை அவர்களிடம் கேளுங்கள். கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.

நகராட்சி தேர்தல் வாக்குகள் எவ்வளவு?
நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக வென்றது. பாஜகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி முதலில் உள்ளது, எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள். அதை வைத்து நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாம். 234 தொகுதியையும் தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications