கோடநாடு கொலை வழக்கு...3வதுநாளாக பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை
ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டனர். கடந்த வாரம் 2 நாட்கள் பல மணிநேரம் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017இல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளனர்.
இவ்வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. 5 தனிப்படைகள், கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் 220க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை வழக்கு...ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
கடந்த சில வாரங்களாக மீண்டும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சசிகலாவிடம் விசாரணை
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் கொடநாடு வழக்கு குறித்து 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளரிடமும் விசாரணை நடந்தது.
சஜீவன் சகோதரர்
அதனை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த அதிமுக நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
பூங்குன்றனர்
கடந்த வாரம் இரண்டு நாட்கள் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பதில் பதிவு செய்யப்பட்டது. அவரிடம், கொடநாடு பங்களா பணியாளர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜெயலலிதாவின் நிழல்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியவர் பூங்குன்றன். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை சந்திக்க வருபவர்களை இவர் தான் அனுமதித்து வந்தார். கோடநாடு எஸ்டேட் பற்றி நன்கு அறிந்தவர்களில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த பூங்குன்றனும் ஒருவர்.
ஜெயலலிதா கோடநாடு செல்லும் போது பூங்குன்றனும் உடன் செல்வார்.
என்னென்ன கேள்விகள்
விசாரணையின்போது பூங்குன்றனிடம், கோடநாடு எஸ்டேட் கட்டமைப்பு, அங்கு என்னென்ன பொருட்கள் இருந்தன. என்னென்ன ஆவணங்கள் இருந்தது. கோடநாட்டிற்கு ஜெயலலிதா வரும் போது அவரை யார்? யாரெல்லாம் பார்க்க வருவார்கள்? கொள்ளை சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? கொள்ளை சம்பவத்தில் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. கோடநாட்டில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது யார் சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாடு என பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெறுகிறது.