அதிமுகவின் அழிவுக்கு காரணம் ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும்தான்.. கோவை செல்வராஜ் பகீர் குற்றச்சாட்டு
கோவை: அதிமுகவை அழிப்பது ஓபிஎஸ்ஸின் வலதுகரமாக செயல்படும் வைத்திலிங்கம்தான் என அரசியலில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்படுவது அரசியல் களத்தை பரபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவின் எடப்பாடி அணியில் உள்ள ஜெயக்குமார், சிவி சண்முகம், கே பி முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களை தனது பதிலடியால் திணறடித்து வந்தார்.
அது போல் எடப்பாடி பழனிசாமியையும் அவர் விட்டு வைக்கவில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றதொரு கோரிக்கையையும் வைத்திருந்தார்.
நேரம் பார்த்து தாவிய கோவை செல்வராஜ்! சொன்னது ஒன்னு.. செஞ்சது ஒன்னு! பின்னால் இருந்து இயக்கிய 'மாஜி’
எடப்பாடி பழனிசாமி
இப்படி எடப்பாடி பழனிசாமி சொந்தம் கொண்டாடும் அதிமுகவை எப்படியாவது மீட்டு ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைப்பதில் அதிகமாக போராடியவர் கோவை செல்வராஜ் என சொல்லலாம். இப்படி ஓபிஎஸ்ஸுக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்த கோவை செல்வராஜ் நேற்று முன்பு திடீரென ஓபிஎஸ் அணியிலிருந்து விலகினார்.
விலகல் காரணம்
விலகியதற்கான காரணமாக அவர் கூறியிருப்பதாவது: ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்து மட்டுமில்லை, அதிமுகவிலிருந்தே விலகுகிறேன். அதிமுக அழிவதற்கு முக்கிய காரணம் வைத்திலிங்கம்தான். அவர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க ஓபிஎஸ்ஸுக்கு பயம் வருகிறது.
ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும்
ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் சேர்ந்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி கொடுத்து வருகிறார்கள். ஓபிஎஸ் என்னை நீக்கவில்லை. கடந்த 2 மாதங்களாகவே நான்தான் ஒதுங்கி இருந்தேன். நேற்று முன் தினம் ஓபிஎஸ்ஸாகவே என்னிடம் வந்து கோவை மாவட்டத்திற்கு வேறு ஒரு பொறுப்பாளரை நியமிக்கட்டுமா என கேட்டார்.
ஆதரவாளர்கள்
அதற்கு தாராளமாக நியமித்துக் கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றேன். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களை கலந்து ஆலோசனை செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், குன்னம் ராமசந்திரன், மைத்ரேயன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
அதிமுக பொதுக் குழு
நாளை அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ் போகும் போது சும்மா போகாமல் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் குறித்தும் ஓபிஎஸ் குறித்தும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். எனவே பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பலர் ஓபிஎஸ் அணியை விட்டு விலக வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரை இது போன்ற பல அதிரடிகள் ஏற்படும் என்றே தெரிகிறது.
ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்
அடுத்ததாக ஓபிஎஸ் என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. டெல்லி தலைமை மூலம் எப்படியாவது சமாதானம் பேசி அதிமுகவில் பழைய பன்னீராக உலவலாம் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்தகட்டமாக டெல்லி தலைமையை சந்தித்து அதிமுக பஞ்சாயத்தை பேசி தீர்ப்பாரா என்ற கேள்வி எழுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என கூறிவிட்ட நிலையில் அவருடைய முன்னெடுப்புகள் எத்தகையதாக இருக்கும் என தெரியவில்லை.